'டோப்': முகம்மது ஆசிபின் 'பி' சாம்பிள் சோதனையும் பாசிட்டிவ்!

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் நடந்த ஐபிஎல் டுவென்டி 20 தொடரில் கலந்து கொண்ட ஆசிப்பிடம் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முதல் பரிசோதனை முடிவுகள் சமீபத்தில் வெளியாயின. அதில் ஆசிப் ஊக்க பொருளை உட்கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது பி சாம்பிள் சோதனையும் பாசிட்டிவ் என வந்துள்ளது. இதனால் ஆசிப்புக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிப்பின் வக்கீல் ஷாஹித் கரீம் கூறுகையில், பி சாம்பிள் சோதனை பாசிட்டிவ் என வந்துள்ளது. இருப்பினும் முதல் சோதனைக்கும், 2வது சோதனைக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. அது எங்களுக்கு வியப்பளித்துள்ளது என்றார் அவர்.
பி சாம்பிள் சோதனையில், ஆசிப்பின் சிறுநீர் மாதிரியில், 5.4 மில்லி கிராம் அளவுக்கு தடை செய்யப்பட்ட நான்ட்ரோலின் ஊக்க மருந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் சோதனையின் முடிவைத் தொடர்ந்து தனக்கு பி சாம்பிள் சோதனை செய்யுமாறு ஆசிப் கோரியிருந்தார். இதையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதல் சோதனையில் அவரது சிறுநீரில் 6.2 மில்லி கிராம் நான்ட்ரோலின் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மாறுபாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆசிப், இரு சோதனைகளும் இரு விதமான முடிவுகளை தெரிவித்துள்ளது. இது விநோதமாக உள்ளது என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications