
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி. சிறந்த பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான டோணி்க்கு சிறுவயதில் இருந்தே, கால்பந்து விளையாட்டு மீது அலாதி விருப்பம். சிறந்த கால்பந்து வீரராக வர வேண்டும் என்று ஆசைப்பட்ட டோணி, பள்ளிப் பருவத்தில் கிரிக்கெட் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தியதால், சிறந்த கிரிக்கெட் வீரராக மாறினார் என்று அவரது நண்பர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் உலக கால்பந்து ரசிகர்கள் இடையே பிரபலமான யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று அதிகாலையோடு முடிவடைந்தது. இன்று அதிகாலை 12.15 மணிக்கு துவங்கிய இறுதிப் போட்டியில் ஸ்பெயின், இத்தாலி அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய ஸ்பெயின் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த இறுதிப் போட்டியை தனது மனைவியுடன் சேர்ந்து பார்த்து ரசித்ததாக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
கால்பந்து விளையாட்டை பொறுத்த வரை அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தும் அணி நிச்சயம் வெற்றிப் பெறும். இந்த வகையில் ஸ்பெயின் வெற்றிப் பெற்றுள்ளது. இன்றைய போட்டியின் வெற்றி கோல் கீப்பர்களின் திறமையின் அடிப்படையில் அமைந்தது.
இறுதிப் போட்டியை என்னுடன் சேர்ந்து ரசித்த மனைவி சாக்ஷி, போட்டியின் இடையே டிவியை மறைத்து கொண்டு நின்றார். அடுத்த முறை கால்பந்து போட்டியை பார்க்க 3டி டிவியை வாங்க அவர் விரும்புகிறார் என்று நினைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
டோணியின் டுவிட்டர் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில், இந்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கின் கருத்து இருந்தது. அதில், இறுதிப்போட்டியின் இடையே டோணி அவ்வப்போது தனது கருத்துகளை எனக்கு அனுப்பி கொண்டிருந்தார் என்று தெரிவித்துள்ளார்.