டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லக் கூடாது என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்எஸ் கில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளன. இதில் இந்திய அணி பங்கேற்று 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாட ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் மும்பையில் கொலைவெறித் தாக்குதலை நடத்தினர்.
இதனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்லக் கூடாது என பலதரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்எஸ் கில், பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆடுவதற்கு உகந்த நேரம் இதுவல்ல என்று தெரிவித்துள்ளார்.
'பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பைக்கு வந்து கொலைவெறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும்போது இந்திய அணி எப்படி அங்கு சென்று விளையாட முடியும்... இது நாட்டு மக்களின் கோபத்தை இன்னும் அதிகப்படும்த்தும் செயல். பாகிஸ்தானை விட்டு வேறு இடங்களில் இந்தப் போட்டிகளை நடத்தினாலும்கூட அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது' என்று கில் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை சமாதனப்படுத்தும் முயற்சிகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இந்தியா வந்துள்ளார். பாகிஸ்தானுக்கு வெளியே போட்டிகளை நடத்தவும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந் நிலையில் அமைச்சர் கில் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் பாகிஸ்தான் தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.