கம்பீர் சதம்- தோல்வியிலிருந்து தப்புமா இந்தியா?
நேப்பியர்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கம்பீர் சதம் கடந்தார். சச்சின், டிராவிட் ஆகியோர் அரைசதம் கடந்தனர். போட்டி டிராவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.
நேப்பியரில் நடந்து வரும் 2வது டெஸ்டில் இந்தியா பாலோ ஆன் பெற்றது. மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்து, இன்னிங்சில் தோல்வியை தவிர்க்க போராடி கொண்டிருந்தது.
இன்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. கம்பீர், டிராவிட் ஜோடி ஆட்டத்தை துவக்கியது. நியூசிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த போதும் இந்த ஜோடி ரன்கள் அதிகம் சேர்க்கவில்லை. தோல்வியின் பிடியிலிருந்து எப்படியும் தப்பி விட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தது.
கம்பீரும், டிராவிடும் நிதானமாகவும், சிறப்பாகவும் ஆடினர். முதலில் கம்பீர் அரை சதம் போட்டார். தொடர்ந்து டிராவிட்டும் 50 ரன்களை தாண்டினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்த நிலையில் மிகவும் நிதானமாக விளையாடிய டிராவிட் 220 பந்தில் 62 ரன்கள் எடுத்து வெட்டோரி சுழலில் வெளியேறினார்.
சச்சின் அரைசதம்...
அடுத்து வந்த சச்சின், கம்பீருடன் ஜோடி சேர்ந்தார். இந்த நிலையில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கம்பீர் சதம் கடந்தார். மறுமுனையில் சச்சின் அரைசதம் கடந்தார்.
இறுதியில், இந்திய அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து 62 ரன்கள் பின்தங்கியுள்ளது. கம்பீர் 102 (14 பவுண்டரி), சச்சின் 58 (1 சிக்சர், 8 பவுண்டரி) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
கடைசி நாளான நாளை இந்திய அணி சிறப்பாக ஆடினால் தோல்வியை தவிர்த்து போட்டியை டிரா செய்யலாம்.


Click it and Unblock the Notifications