
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெசி ரைடர்(28). அவர் மெரிவேல் என்ற இடத்தில் உள்ள பாருக்கு நேற்று இரவு சென்றார். அவரும் அவரது நண்பர்களும் பாரில் குடித்துவிட்டு வெளியே வந்தபோது யாரோ அவரை தாக்கியுள்ளனர். சுமார் 4 பேர் ரைடரை கடுமையாக தாக்கியதாக சம்பவத்தைப் பார்த்த ஒருவர் தெரிவித்தார். ஆனால் தாக்கியவர்கள் யார், எதற்காக தாக்கினர் என்று இன்னும் தெரியவில்லை.
இந்திய நேரப்படி இரவு 12.44 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில் ரைடரின் மண்டையோடு உடைந்தது. இதையடுத்து அவர் கிறைஸ்ட்சர்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கோமாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ரைடர் குடிபோதை காரணமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார். கடந்த 2008ம் ஆண்டில் பாரில் குடித்துவிட்டு ஜன்னலை குத்தியதில் அவர் கையில் தையல் போட வேண்டியதாகிவிட்டது.
அவர் அடுத்த வாரம் துவங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாட இந்தியா வரவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.