நேப்பியர்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி நாளை நேப்பியர் நகரில் துவங்குகிறது. டொன்டி-20 தொடரில் கோட்டைவிட்ட இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் தனது வெற்றி கணக்கை துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சச்சி்ன் களமிறங்குவது இந்திய பேட்டிங்கின் பலத்தை அதிகரித்துள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி டொன்டி-20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. டொன்டி-20 தொடரை நியூசிலாந்து 2-0 என வென்றது.
இந்நிலையில் ஐநது போட்டிகள் கொண்டு ஒரு நாள் தொடர் நாளை நேப்பியர் நகரில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு துவங்குகிறது. டொன்டி-20 தொடரில் பங்கேற்காத சச்சின் இதில் விளையாட இருக்கிறார். இது இந்திய பேட்டிங்கிற்கு தேவையான அனுபவத்தை கொடுக்கும்.
யுவராஜ், ரெய்னா நல்ல பார்மில் இருக்கின்றனர். இவர்களுடன் ஷேவாக், கம்பீர், கேப்டன் டோணி ஆகியோரும் விளாச ஆரம்பித்தால் இந்தியா, நியூசிலாந்துக்கு கடும் சவால் கொடுக்கலாம்.
யூசுப் பதான், இர்பான் பதான் சகோதரர்கள் கடைசி கட்டத்தில் ரன் குவிப்புக்கு உதவுவார்கள். ஜாகிர், இஷாந்த், ஹர்பஜன் என பந்துவீச்சும் பலமாக இருக்கிறது.
முதல் ஒரு நாள் போட்டி குறித்து டோணி கூறுகையில்,
சச்சின் வந்திருப்பது அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அவர் களத்தில் இருந்தாலே எதிரணிகள் மிரண்டுவிடும். பேட்டிங் மற்றும் பவுலிங் மட்டுமல்லாமல் அவர் அணிக்கு தேவையான அனுபவத்தையும் வழங்கி வருகிறார். 422 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 16,440 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் நம்முடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்திய வீரர்கள் அனைவரும் நன்றாக பேட் செய்து வருகின்றனர். தவறுகளை உடனடியாக களைந்துவிட்டோம். அது மீண்டும் நடக்காது என நம்புகிறேன் என்றார்.
நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி கூறுகையில், கடந்த முறை சச்சினை 0,1,1 என சொற்ப ரன்களுக்கு அவுட் செய்தோம். இம்முறையும் சச்சினை வீழ்த்த கச்சிதமான திட்டம் வகுத்துள்ளோம் என்றார்.