டாக்கா: வங்கதேச முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் இந்தியாவை பழி தீர்த்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
வங்கதேசத்தில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட்தொடரின் இறுதிப் போட்டி நேற்ரு நடந்தது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.
லீக் போட்டியில் பாகிஸ்தானை 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்திருந்தது. எனவே நேற்றைய இறுதிப் போட்டியிலும் இந்தியா அபாரமாக வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் பாகிஸ்தான் நேற்று இந்தியாவை பழிவாங்கி விட்டது.
முதலில் பாகிஸ்தான் பேட் செய்தது. நிதானமாக ரன்களைக் குவித்த பாகிஸ்தான் சிறப்பாக ஆடி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 315 ரன்களைக் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரரான சல்மான் பட் மிகச்சிறப்பாக ஆடினார். நிதானமாக ஆடிய பட், அபார சதம் போட்டார். 129 ரன்கள் எடுத்த அவர் 46வது ஓவர் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த ஓவரில் அவருக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஓய்வு பெற்று வெளியேறினார்.
அதேபோல யூனிஸ்கானும் அபாரமாக ஆடி108 ரன்களைக் குவித்தார். மிஸ்பா உல் ஹக் தன் பங்குக்கு 33 ரன்களைச் சேர்த்தார். இறுதியில், 50 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து பாகிஸ்தான் 315 ரன்களைக் குவித்தது.
இந்திய பந்து வச்சு நேற்று சற்றும் எடுபடவில்லை. இர்பான் பதான் மட்டும் 2 விக்கெட்களை எடுத்தார். இருப்பினும் பத்து ஓவர்கள் வீசி 59 ரன்களை இவர் வாரிக் கொடுத்தார். நேற்று இந்தியத் தரப்பில் 8 பேர் பந்துவீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் வெற்றிக்குத் தேவையான இலக்கை விரட்டத் தொடங்கிய இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே சரிவு ஏற்பட்டது. ஷேவாக் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். கம்பீர் சிறப்பாக ஆடி40ரன்களை எடுத்தார். பின்னர் வந்த வீரர்களும் தங்களது பங்குக்கு சிறப்பாக ஆடினர்.
நம்பிக்கையுடன் விளையாடிய இந்தியா சிறந்த முறையிலேயே ரன்களைச் சேர்த்து வந்தது. ரோஹித்சர்மா 24, யூசுப் பதான் 25 ரன்களில் வீழ்ந்தனர். யுவராஜ் சிங் சிறப்பாக ஆடி 56 ரன்களைக் குவித்தார். ரெய்னா 24 ரன்கள் எடுத்தார். கேப்டன்டோணி பொறுப்புடன் ஆடி 64 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இர்பான் பதான் பேட்டிங்கிலும் பொறுப்பாக ஆடி 28 ரன்களைச் சேர்த்தார்.
ரன்கள் ஒருபக்கம் சேர்ந்தாலும் குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்கள் விழுந்ததால் இந்தியாவால் 48.2 ஓவர் வரை மட்டுமே சமாளிக்க முடிந்தது. 48.2வது ஓவரில் அனைத்து விக்கெட்களையம் இழந்து 290 ரன்களில் இந்தியா ஆட்டமிழந்தது.
வீரேந்திர ஷேவாக் சற்று நிலைத்து ஆடி நல்ல ஸ்கோரை எடுத்திருந்தால் நேற்று நிச்சயம் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்.
ஆட்ட நாயகனாக யூனிஸ்கானும், தொடர் நாயகனாக சல்மான் பட்டும் அறிவிக்கப்பட்டனர். சல்மான் பட்டுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.