மொஹாலி (சண்டிகர்): மொஹாலியில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக ஆடி, கடைசி நேரத்தில் வெற்றியை தட்டிச் சென்று இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியைச் சந்தித்தது. இந்தப் பின்னணியில் தீபாவளி தினமான நேற்று சண்டிகர், மொஹாலியில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் இரு அணிகளும் சந்தித்தன.
இப்போட்டியில் சுழற் பந்து வீச்சாளர் முரளி கார்த்திக்குக்குப் பதில், ஷேவாக் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். டாஸ் வென்ற கேப்டன் டோணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார்.
சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக ஆடி 99 ரன்களைக் குவித்து செஞ்சுரியைத் தவறி விட்டு அவுட் ஆனார். கெளதம் காம்பீர் மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 57 ரன்களை அவர் குவித்தார். குறிப்பிட்டுச் சொல்லும்படியான பேட்டிங்கை வெளிப்படுத்திய இன்னொரு பேட்ஸ்மேன் ஹர்பஜன் சிங். பொறுப்பாக ஆடிய அவர் ஆட்டமிழக்காமல் 38 ரன்களை எடுத்தார்.
யுவராஜ் சிங் 34 ரன்களைச் சேர்த்தார். ஷேவாக்கின் பங்கு 25. கங்குலி (6), டோணி (4), ராபின் உத்தப்பா (0) ஆகியோர் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தினர். இறுதியில், இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 321 ரன்களைச் சேர்த்தது. சோயிப் அக்தர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் பாகிஸ்தான் தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. பெரிய ஸ்கோர் என்பதால் பாகிஸ்தான் வீரர்கள் ஆரம்பத்தில் தடுமாறினர். தொடக்க ஆட்டக்காரர்களான கம்ரான் அக்மல், சல்மான் பட் ஆகியோர் பெரிய ஸ்கோரை சேர்க்காமல் வெளியேறிய நிலையில், யூனிஸ்கான் அபாரமாக ஆடி ரன் குவிக்க ஆரம்பித்தார்.
சிறப்பாக ஆடிய யூனிஸ் கான் 117 ரன்களைக் குவித்தார். மிஸ்பா உல் ஹக் 49 ரன்களைச் சேர்த்தார்.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவது சந்தேகம் என்ற நிலை நிலவியது. ஆனால் இந்த நிலையை அப்படியே மாற்றி இந்தியாவுக்கு பாதகமான நிலையை உருவாக்கினார் ஷாஹித் அப்ரிடி.
ஆரம்பத்தில் நிதானமாக ஆடத் தொடங்கிய அவர் பின்னர் அதிரடிக்கு மாறினார். மின்னல் வேகத்தில் ரன் குவித்த அப்ரிடி, வெற்றி இலக்கை படு வேகமாக சுருக்கி பாகிஸ்தானை வெற்றி பெறவும் வைத்தார்.
14 பந்துகளை மட்டுமே சந்தித்து 29 ரன்களைக் குவித்தார் அப்ரிடி. அவருக்குத் துணையாக சோஹைல் தன்வீர் 14 ரன்களைச் சேர்த்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.
வெற்றி விளிம்பில் நின்றிருந்த இந்தியாவை, யூனிஸ்கானின் அபார செஞ்சுரி, மிஸ்பாவின் சிறப்பான ஆட்டம், அப்ரிடியின் அட்டகாச ஆட்டம் தோல்விப் பள்ளத்தாக்கில் தள்ளி விட்டு விட்டது.
இறுதியில் ஒரு பந்து மீதம் இருந்த நிலையில், 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 322 ரன்களைச் சேர்த்து பாகிஸ்தான் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக யூனிஸ்கான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு அணிகளும் அடுத்து கான்பூரில் வருகிற 11ம் தேதி மோதுகின்றன.