பான்டிங் தலைமையிலான ஆஸி அணி படு மோசம் - ஹோல்டிங் சாடல்

மெல்போர்ன்: இதுவரை இருந்த கிரிக்கெட் அணிகளிலேயே ரிக்கி பான்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிதான் மகா மோசமான அணி என்று வேகப் பந்து வீச்சு ஜாம்பவானும், முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் புயல் வேகப் பந்து வீச்சாளருமான மைக்கைல் ஹோல்டிங் சாடியுள்ளார்.
ஹர்பஜன் சிங் விவகாரத்தில் அவருக்கு முழு ஆதரவு தெரிவித்துக் குரல் கொடுத்தவர் ஹோல்டிங். யாரையும் குரங்கு என்று திட்டினால் அதில் எந்தத் தவறும் இல்லை. மனிதர்கள் குரங்கிலிருந்து வந்தவர்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அப்படி இருக்கையில் குரங்கு என்று ஒருவரை திட்டுவதில் எந்தத் தவறும் இல்லை, அவதூறும் இல்லை, அது இன ரீதியான வார்த்தை என்றும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார் ஹோல்டிங்.
இந்த நிலையில் ரிக்கி பான்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை மிகக் கடுமையாக சாடியுள்ளார் ஹோல்டிங். இதுகுறித்து அவர் கூறுகையில், உலகிலேயே மோசமான கிரிக்கெட் அணி எது என்று என்னைக் கேட்டால் ஆஸ்திரேலிய அணியைத்தான் சொல்வேன்.
அவர்களது மோசமான நடத்தைகளால் உலகின் மோசமான அணி என்று அவர்கள் பெயரெடுத்துள்ளனர்.
நடுவர்களுக்கு நெருக்குதல் கொடுத்து எதிரணியினரை ஆட்டமிழக்கச் செய்கிறார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். எதற்கெடுத்தாலும் அவுட் கேட்பது என்பது ஆஸ்திரேலியர்களின் வழக்கமாகி விட்டது.
நடுவர் எந்த அவுட்டையாவது நிராகரித்து விட்டால் அதிக கோபமடைவார்கள். ஆனால் மற்ற அணியினர் அப்படி இல்லை. நடுவர் அவுட் தராவிட்டால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை ஆனால் ஆஸ்திரேலியர்கள் அப்படி இல்லை.
ஆஸ்திரேலியர்களின் இந்த நெருக்குதலுக்கு பல நல்ல நடுவர்கள் பலியாகியுள்ளனர்.
உலகச் சாம்பியன் என்ற வகையில் ஆஸ்திரேலியா ஒழுக்கத்துடனும், உண்மையான விளையாட்டு உணர்வுடனும் விளையாட வேண்டும்.
உலகிலேயே நம்பர் ஒன் டீம் என்ற பெருமையை தக்க வைத்துக் கொள்ள ஆஸ்திரேலிய அணி முயல வேண்டும் என்றார் ஹோல்டிங்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications