
தென்கொரியாவின் சாங்வான் நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 25 மீ துப்பாக்கி சுடும் பிரிவில் இந்தியாவின் ரஹி சர்னோபத் தென் கொரிய வீராங்கனை கியோன்கே கிம்மை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் தங்கம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அஞ்சலி பகத், ககன் நரங், சஞ்சீவ் ராஜ்புட், ராஜ்யவர்தன் சிங், ராஞ்சன் சோதி, மானவ்ஜித் சிங் சந்து ஆகியோர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகளில் தங்கம் வென்ற இந்தியர்கள் ஆவர்.
இது குறித்து ரஹி கூறுகையில்,
என்னுடைய கனவு நிஜமாகிவிட்டது. கடந்த சில மாதங்களாக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன் என்றார்.
ரஹி கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து அவர் 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.