கொழும்பு: நேற்று மழை காரணமாக கைவிடப்பட்ட இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது.
இன்று காலை டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து விராட் கோலி, கெளதம் கம்பீர் ஆகியோர் களமிறங்கினர்.
விராட் கோலி 54 ரன்களும், கெளதம் கம்பீர் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மூன்றாவதாக களம் கண்ட, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் வெறும் 'முட்டையுடன்' திரும்பிப் போனார்.
அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவும், தோணியும் அதிரடி ஆட்டம் ஆடினர். ரெய்னா 69 ரன்களும், தோணி 53 ரன்களுடனும் விளையாடிக் கொண்டுள்ளனர்.
இந்தியா மூன்று விக்கெட் இழப்புக்கு 203 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந்து கொண்டுள்ளது.
இலங்கை அணியின் சார்பில் வாஸ், குலசேகரா, மிராண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. இதனால் 4வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை வெல்ல முடியும்.