
ஹைதராபாத்தில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து 15 முதல் 20 பேர் வரை பலியாகி நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்த குண்டுவெடிப்பு வேற எங்கோ நடைபெறவில்லை.. இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கும் சென்னைக்கு மிக அருகில் உள்ள ஹைதராபாத் நகரத்தில்தான் நடைபெற்றும் இருக்கிறது.
ஆனால் இந்திய அணி பெயரளவுக்குக் கூட எந்த ஒரு துக்கத்தையும் வெளிப்படுத்தவில்லை. பல்லாயிரம் கோடி ரூபாயை வைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் குறைந்தபட்சம் சில லட்சமாவது நிதி உதவியைக் கூட அறிவிக்கவில்லை. துக்கம் அனுசரிக்கும் வகையில் ஒரு கருப்புத் துணியைக் கூட கட்டிக் கொள்ளவில்லை.
எந்த ஒரு துயரமுமே இல்லாமல் மட்டையைத் தூக்கிக் கொண்டு ஆட கிளம்பி இருக்கிறது.. ஒருவேளை உயிரிழந்தோரில் இந்திய அணியின் அல்லது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உறவினர்கள் இறந்தால்தான் இப்படி செய்வார்களோ என்னவோ தெரியவில்லை?
உண்மைதானே!
மும்பையில் அதாவது சச்சின் டெண்டுல்கரின் சொந்த ஊரில் தாக்குதல் நடந்த போது துயரப்பட்ட துக்கப்பட்ட அவரால் முடிந்தது. தாம் அடித்த சதத்தை அர்ப்பணிக்கத் தெரிந்தது.. மும்பையில் சிந்தினா ரத்தம்... ஹைதராபாத்தில் சிந்தினா அது தக்காளி சட்டினியா என்ற கேள்விதானே இயல்பாக எழும்.
அதுவும் கொடுமை என்னவெனில் மார்ச் 2-ந் தேதி ஹைதராபாத்தில்தான் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. அந்த நகரத்து ரசிகர்கள்தான் இந்திய அணிக்காக கை தட்டி உற்சாகப்படுத்தக் காத்திருந்தனர். அவர்கள் தற்போது துயரத்தில் இருக்கின்றனர். அந்தத் துயரைப் பங்குப் போடக் கூட மனமில்லாத ஒரு ஈவிரக்கமற்ற அணியாகவா இந்திய வீரர்கள் நடந்து கொள்வது?
உங்களுக்கு ரசிகர்களின் கைதட்டல் வேண்டும்.. பணம் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும்...அந்த ரசிகர்களின் வீடுகளில் இழவு விழுந்தால் 'செத்து போகட்டும்' என்ற பாணியா? அடக் கொடுமையே!