மொகாலி: மொகாலியில் இன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற லாராவின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்தார் டெண்டுல்கர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. பெங்களூரில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டி மொஹாலியில் இன்று காலை தொடங்கியது. தோள்பட்டை காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே அணியில் இடம் பெறவில்லை. இதனால் இந்த போட்டிக்கு மகேந்திர சிங் டோனி கேப்டனாக செயல்படுகிறார். இன்று தொடங்கிய போட்டியில் இந்திய அணி டாசில் வென்று முதலில் பேட் செய்யக் களம் இறங்கியது. கவுதம் கம்பீரும், வீரேந்திர ஷேவாக்கும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஓரளவு சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். வீரேந்திர ஷேவாக் 35 ரன்கள் எடுத்திருந்த போது ஜான்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். கம்பீர் 67 ரன்னுக்கு ஜான்சனிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்து வந்த திராவிட் 39 ரன்களில் லீயிடம் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நம்பிக்கை நாயகன் லட்சுமணன் 12 ரன்களில் ஜான்சனிடம் அவுட் ஆனார். இப்போது அதிரடி நாயகர்கள் சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் முறையே களமிறங்கினர். இதில் 13 ரன்கள் எடுத்த நிலையில் டெண்டுகள் புதிய உலக சாதனையைப் படைத்தார். இதுவரை டெஸ்ட் போட்டிகளி்ல் பிரையன் லாரா தான் 11,953 எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். 11,954 ரன்களைக் குவித்துள்ளதன் மூலம் இந்த சாதனையை டெண்டுல்கர் இன்று முறியடித்தார். போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜான்சன் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரட் லீக்கு 1 விக்கெட் கிடைத்தது. தலைகீழாக பறந்த தேசிய கொடி: ஆனால், இந்தப் போட்டி நடந்து கொண்டிருந்தபோது மைதானத்தில் இந்திய தேசியக் கொடி தலைகீழாகப் பறக்க விடப்பட்டிருந்தது. இதையடுத்து மைதானத்தில் பெரும் ஆத்திரம் பரவியது. பின்னர் தவறு திருத்தப்பட்டது.