
கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார், வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த நிலையில் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவின் ப்ரீ ஸ்டைல் போட்டியில் பங்கேற்ற சுஷில் குமார், இறுதிப் போட்டி வரை முன்னேறினார். ஆனால் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக ஆடி, வெள்ளிப்பதக்கம் வென்ற சுஷில் குமாருக்கு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் டுவிட்டர் இணையதளம் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கூறியிருப்பதாவது,
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் சுஷில் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம், இந்தியாவிற்கு 2வது வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் மேற்கொண்ட கடும் முயற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு ஆகியவற்றை நினைத்து பெருமைப்படுகிறோம். சுஷில் வெல்டன்! என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அதிரடி துவக்க பேட்ஸ்மேன் ஷேவாக் கூறியிருப்பதாவது, ஒலிம்பிக் பதக்கம் வென்றதன் மூலம் சுஷில் குமார், தான் மனவலிமை கொண்ட உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார். அவரது வெற்றியை எண்ணி பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங் கூறியிருப்பதாவது, இந்தியாவிற்கு தனி போட்டிகள் பிரிவில் 2வது முறையாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார், ஒரு சிறந்த விளையாட்டு வீரர். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய இளம்வீரர் சுரேஷ் ரெய்னா கூறியிருப்பதாவது,
வெள்ளிப்பதக்கம் என்பது தங்கத்தை விட மதிப்பு குறைந்ததாக கருத முடியாது. சுஷில் குமார் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். அவர் உடல்நலக் குறைவுடன் போட்டியில் பங்கேற்றதாக கேள்விப்பட்டேன். ஆனால் அவர் பங்கேற்ற போட்டியில் அருமையாக ஆடினார். ஒலிம்பிக் போட்டியில் 2வது முறையாக பதக்கம் வென்ற சுஷில் குமாருக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.