ஹாமில்டன்: ஹாமில்டன் டெஸ்டில் சச்சின் சதம் கடந்து அசத்த, இந்திய அணி முதல் இன்னிங்சில் 520 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து, 166 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஹாமில்டனில் நடக்கிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் 70, யுவராஜ் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. யுவராஜ் 22 ரன்களுக்கு மார்டின் பந்தில் அவுட்டானார். அடுத்து டோணி வந்தார். மறுமுனையில் சூப்பராக விளையாடி சச்சின் சதம் கடந்து அசத்தினார். இது டெஸ்ட் அரங்கில் அவர் கடக்கும் 42வது சதமாகும். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த கேப்டன் டோணி 47 ரன்களுக்கு அவுட்டாகி, அரைசதம் கடக்கும் வாய்ப்பை இழந்தார்.
ஹர்பஜன் 16 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் 26 பவுண்டரிகளுடன் 160 ரன்கள் குவித்து, ஓ பிரையன் பந்தில் ரோஸ் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ஜாகிர் அரைசதம்...
கடைசிக்கட்டத்தில் வந்த ஜாகிர் ரன் மழை பொழிந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 8 பவுண்டரிகள் உட்பட 46 பந்தில் 51 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இஷாந்த் 6, முனாப் 9 ரன்களுக்கு அவுட்டானார்கள். இந்தியா முதல் இன்னிங்சில் 152.4 ஓவரில் 520 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 241 ரன்கள் முன்னிலை பெற்றது.
அடுத்து இரண்டாவது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு, ஜாகிர் முதல் ஓவரிலே அதிர்ச்சி அளித்தார். இவர், மெஷின்டோசை டக் அவுட்டாக்கினார். சிறப்பாக விளையாடிய குப்டில் 48 ரன்களுக்கு ஹர்பஜன் பந்தில் பெவிலியன் திரும்பினார். 2 ரன்கள் எடுத்திருந்த மில்சை முனாப் வெளியேற்றினார்.
நியூசிலாந்து மூன்றாவது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து, 166 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.