
ஒலிம்பிக் போட்டியில் எதிர்பாராத விதமாக் சாய்னா பெற்ற வெண்கலப் பதக்கம் குறித்த செய்திதான் நேற்று இந்தியர்களின் முக்கியப் பேச்சாக இருந்தது. இந்த பரபரப்பில் இலங்கையை வீழ்த்தி 4-1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வென்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வெற்றியைக் கூட மக்கள் தற்காலிகமாக மறந்து போய் விட்டனர்.
நேற்றைய தொடர் வெற்றி மூலம் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 2வது இடத்திற்கும் உயர்ந்துள்ளது. ஆனால் இந்த செய்திகளெல்லாம் நேற்று சாய்னாவின் அபார பதக்க வெற்றியில் அடிபட்டுப் போய் விட்டது.
ஒலிம்பிக் போட்டி ஒன்றில், தனி நபர் பிரிவில் பதக்கம் வென்ற 2வது பெண் என்ற பெருமையை நேற்று சாய்னா வென்றார். இதற்கு முன்பு கர்ணம் மல்லேஸ்வரிதான் பளு தூக்குதலில் ஒரு பதக்கம் வென்றிரு்நதார். அதேசமயம், பேட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் ஒருவர் பதக்கம் வெல்வதும் இதுவே முதல் முறையாகும். இந்த செய்தியைத்தான் நேற்று இந்திய மக்கள் சந்தோஷத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை மக்கள் கண்டு கொள்ளவில்லை.
மேலும் அத்தனை மீடியாக்களிலும் சாய்னாதான் இன்று தலைப்புச் செய்தியாக திகழ்ந்தார். கிரிக்கெட் வெற்றி 2 காலம் செய்தியாகி விட்டது. சில செய்தித் தாள்களில் ஒரு காலம் செய்தியாக இது மாறிப் போயிருந்தது.
சச்சின் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் கூட இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை விட சாய்னாவின் வெற்றிக்கே முதலிடம் கொடுத்து டிவிட்டரில் வாழ்த்தியிருந்தது ஆச்சரியமான விஷயம்.
இந்தியாவுக்கு இந்த முறை தங்கப் பதக்கத்திற்கான வாய்ப்புகள் இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இருந்தாலும் மக்கள் மனம் தளரவில்லை. கிரிக்கெட் மாயையும் தாண்டி இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் என்ன சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஆர்வத்தில்தான் பெரும்பாலான இந்தியர்கள் உள்ளனர். இது ஒரு சந்தோஷமான மாற்றம் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை.
கிரிக்கெட்டை மட்டும் கட்டி அழுது கொண்டிருக்காமல், பிற விளையாட்டுக்களுக்கும் நாம் தீவிர ஆதரவும், ஊக்கமும் கொடுத்தால், இன்று சீனா சாதித்துக் கொண்டிருப்பது போல நாமும் ஒரு நாள் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கலாம் என்பதில் சந்தேகமில்லை.