கொழும்பு: கொழும்பில் இன்று நடந்து வரும் இந்தியா, இலங்கை இடையிலான 2வது ஒரு நாள் போட்டியில், சச்சின் 6 ரன்களில் ஆட்டமிழ்நதார். ஷேவாக் அதிரடியாக ஆடி 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது.
இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் ஒரு டுவென்டி-20ல் போட்டியில் விளையாட இருக்கிறது.
தம்புலாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி கொழும்புவில் தவங்கியது.
முதல் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத ஷேவாக், ரோகித் சர்மாவுக்கு பதில் சேர்க்கப்பட்டார். முனாப் படேலுக்கு பதிலாக பிரவீண் குமார் களமிறங்கினார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சினும், ஷேவாக்கும் இறங்கினர். கடந்த போட்டியில் சச்சின் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால் ஷேவாக் பட்டாசாகப் பொறிந்து 26 பந்துகளில் 42 ரன்களைக் குவித்து ஜெயசூர்சூயாவால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
மறு முனையில் சிறப்பாக ஆடி வந்த கம்பீரும் 28 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த நிலையில், மகரூப் பந்தில் ஆட்டமிழந்தார்.
யுவராஜ் சிங்கும், ரெய்னாவும் பொறுமையாக ஆடினர். ரெய்னா 29 ரன்களில் விழ, நிதானமாக ஆடிய யுவராஜ் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் டோணி 23 ரன்களைச் சேர்த்தார். யூசுப் பதான் சிறப்பாக ஆடி 28 பந்துகளில் 21 ரன்களைச் சேர்த்தார்.
பின்னர் வந்த ஜாகிர்கான் 17 ரன்களும், பிரவீன் குமார் 15 ரன்களும் சேர்க்க, இந்தியா 50 ஓவர்கள் இறுதியில், 9 விக்கெட்களை இழந்து 256 ரன்களை சேர்த்தது.