பெங்களூர்: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் அவுட் ஆப் பார்ம் வீரேந்திர ஷேவாக் மீண்டும் இடம் பிடித்துள்ளார். பார்மில் உள்ள பல இளம் வீரர்கள் மீண்டும் ஒருமுறை புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்லவுள்ளது. அங்கு 4 டெஸ்ட் போட்டிகளிலும், இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி விவரம் நேற்று பெங்களூரில் வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலிய தொடருக்கான 24 பேர் கொண்ட உத்தேச அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து 16 பேர் தேர்வு செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில் காமெடி என்னவென்றால் வீரேந்திர ஷேவாக்குக்கு இடம் கிடைத்துள்ளதுதான். சமீப காலமாக இவர் சுத்தமாக பார்மில் இல்லை. மேலும் 24 பேர் கொண்ட உத்தேச அணியிலும் ஷேவாக்கின் பெயர் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஷேவாக் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல சமீப காலமாக சிறப்பாக பந்து வீசிய முரளி கார்த்திக்கும் அணியில் இடம் பெறவில்லை. 2 ஸ்பின்னர்களுக்கு மட்டுமே இடம் தர முடியும் என்பதால் முரளியை கழற்றி விட்டுள்ளனர். அதேபோல முனாப் படேலும் அணியில் சேர்க்கப்படவில்லை. இதுபோல அஜீத் அகர்கர், ரணதேவ் போஸ், பையூஷ் சாவ்லா, ஆகாஷ் சோப்ரா, பார்த்திவ் படேல் ஆகியோருக்கும் இடம் கிடைக்கவில்லை. இதுதவிர கெளதம் கம்பீருக்கும் அணியில் இடம் தரப்படவில்லை. திணேஷ் கார்த்திக் பாகிஸ்தான் தொடரில் சரியாக விளையாடவில்லை என்ற போதிலும், 3வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் அவர் போட்ட அரை சதத்தால், ஆஸ்திரேலிய தொடரில் இடம் கிடைத்துள்ளது. ஸ்ரீசாந்த் காயத்தால் அவதிப்படுவதாலும், முனாப் படேல் நீக்கப்பட்டதாலும், இர்பான் பதான், இஷாந்த் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இஷாந்த் சர்மா, 3வது டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தானைச் சேர்ந்த இளம் வீரர் பங்கஜ் சிங் மட்டுமே அணியில் இடம் பெற்றுள்ள ஒரே புதுமுகம். 23 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 73 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இந்தியா ஏ அணியில் இடம் பெற்று கென்யா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் சுற்றுப்பணம் செய்துள்ளார். இந்தியாவில் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இந்த முறையும் பல திறமையான இளம் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழக வீரர் பத்ரிநாத். தமிழக ரஞ்சி அணியின் கேப்டனான பத்ரிநாத் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம் பெறவில்லை. அணி விவரம் அனில் கும்ப்ளே (கேப்டன்), டோணி (துணை கேப்டன்), ராகுல் டிராவிட், செளரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், வீரேந்திர ஷேவாக், திணேஷ் கார்த்திக், வாசிம் ஜாபர், ஆர்.பி.சிங், இர்பான் பதான், இஷாந்த் சர்மா, பங்கஜ் சிங்.