டெல்லி: டெல்லி அணியில் வீரர்கள் தேர்வில் அதிக குளறுபடிகள் நடந்து வருகின்றன. இதனால் டெல்லி அணியில் விளையாட எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. விரைவில் ஹரியானா அணியில் விளையாட இருக்கிறேன் என ஷேவாக் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக். சமீபத்தில் காயமடைந்த அவர் தென் ஆப்ரிக்கா சென்று வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இதையடுத்து அவரால் இலங்கை முத்தரப்பு மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற முடியவில்லை.இந்நிலையில் ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்து அவர் அந்த அணியிலிருந்து விலக போவதாக தெரிவித்துள்ளார்.சமீபத்தில் இது தொடர்பாக டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் அருண் ஜேய்ட்லிக்கு கடிதம் எழுதினார். அதில் டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வு குழுவினர் சிலர் ஒன்றாக சேர்ந்து கொண்டு, தேர்வு குழு தலைவராக பொம்மையாக்கிவிட்டதாகவும், அணி தேர்வில் பயங்கர குளறுபடி நடப்பதாகவும் தெரிவித்திருந்தார்.மேலும், இதனால் தான் டெல்லி அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு செல்லப்போவதாகவும் கூறினார். இதையடுத்து அருண் ஜேய்ட்லி தன்னை வந்து நேரில் சந்திக்குமாறும், இந்த பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம் என்றும் ஷேவாக்கிடம் தெரிவித்துள்ளார்.வீரர்கள் தேர்வில் குளறுபடி...இந்நிலையில் நேற்று ஷேவாக் கூறுகையில்,டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் இருக்கும் சிலர் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். அவர்கள் 19 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட ரஞ்சி அணி தேர்வில் அதிகம் தலையிட்டு வருகின்றனர். 15 பேர் கொண்ட அணியில் தங்களுக்கு நெருக்கமான சிறுவர்களை ஒவ்வொருவரும் தலா ஒன்று அல்லது இரண்டு என சேர்த்துவிடுகின்றனர். இதனால் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது.இந்த குளறுபடிகள் காரணமாக எனக்கு டெல்லி அணியில் விளையாட பிடிக்கவில்லை. இது குறித்து டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் அருண் ஜேய்ட்லி, பேச அழைத்துள்ளார். அவருடன் வரும் 27, 28ம் தேதி பேசவிருக்கிறேன். பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு கிடைக்கவில்லை என்றால் நான் ஹரியானா அணிக்கு மாறிவிடுவேன்.டெல்லி கிரிக்கெட் சங்கத்திடம் ஹரியானா அணிக்கு செல்ல தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளேன். இதை அவர்கள் கொடுக்கவிட்டாலும் என்னால் டெல்லி அணியில் இருந்து விலக முடியும்.பிசிசிஐ விதிகள் படி ஒரு மாநில அணி ஒரு வீரரை துன்புறுத்தினால், பிசிசிஐயின் துணையுடன் அந்த வீரரால் வேறு மாநில அணிக்கு மாற முடியும். ஷேவாக்கின் இந்த முடிவை ஹரியானா கிரிக்கெட் சங்கம் வரவேற்றுள்ளது. டெல்லி சங்கம் மறுப்பு...ஆனால், ஷேவாக்கின் குற்றச்சாட்டுக்களுக்கு டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சுனில் யாதவ் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,ஷேவாக் டெல்லி அணியில் மயங்க் டெக்லன், பிரதிப் சங்வான் என இரண்டு வீரர்களை சேர்க்க வேண்டும் என விரும்புகிறார். ஆனால், டெல்லி அணியில் தற்போதும் விளையாடும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதனால் அவர்களை சேர்க்க முடியவில்லை.அவர்களை அணியில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஷேவாக் இப்படி மிரட்டி வருகிறார். ஷேவாக்கிற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்து கொடுத்திருக்கிறோம். அவர் தான் டெல்லி அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அவருடைய குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அவருடன் இது குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம். அவரிடம் இருந்து இதுவரை எங்களுக்கு விலகல் கடிதம் எதுவும் வரவில்லை என்றார்.கம்பீர், இஷாந்த் ஆதரவு...ஷேவாக்கின் கருத்துக்கு அவருடன் துவக்க வீரராக ஜோடி சேர்ந்து விளையாடி வரும் கம்பீரும் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையி்ல்,ஷேவாக்கின் கருத்துக்களுக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். தேர்வு குழு உறுப்பினர்கள் ஒளி மறைவு இல்லாமல் செயல்பட வேண்டும். இல்லையென்றால் நானும் வேறு மாநில அணிக்காக விளையாடும் முடிவை எடுக்க தயங்கமாட்டேன் என்றார்.வேகப்பந்து வீச்சாளர்களான இஷாந்த் சர்மா, ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரும் தற்போது ஷேவாக்கின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. #13;