மும்பை: வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கோப்பைக்கான போட்டித் தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யூசுப் பதான், பிரக்யான் ஓஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கங்குலி, டிராவிட் நீக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை வங்கதேசத்தில் முத்தரப்பு ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை மோதுகின்றன.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 6ம் தேதி வரை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த இரு தொடர்களுக்குமான 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். அணி விவரத்தை கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா நேற்று அறிவித்தார்.
இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வரும் யூசுப் பதானுக்கு இடம் கிடைத்துள்ளது. அதேபோல இளம் ஹைதராபாத் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல சுரேஷ் ரெய்னாவுக்கும் மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
கங்குலி, டிராவிடுக்கு இடமில்லை:
அதேசமயம், இந்திய அணியின் மும்மூர்த்திகளான சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. காயம் காரணமாக சச்சின் இடம் பெறவில்லை. ஆனால் கங்குலி, டிராவிட் ஆகியோரை தேர்வுக் குழு பரிசீலிக்கவே இல்லை. இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் இவர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
அதேபோல, ஐபிஎல் தொடரில் சிறப்பான முறையில் தங்களது திறமைகளைக் காட்டி வரும் பல இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பத்ரிநாத், வித்யூத் சிவராமகிருஷ்ணன், யோ மகேஷ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. திணேஷ் கார்த்திக்குக்கும் இடம் இல்லை.
பத்ரிநாத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று வெகு சிறப்பாக ஆடி வருகிறார். யோ மகேஷும் தனது பந்து வீசசால் டெல்லி அணியை அரை இறுதிக்கு கொண்டு வர உதவியவர்களில் ஒருவர். இந்தத் தொடரில் திணேஷ் கார்த்திக் சிறப்பாக கீப்பிங் செய்தார். டெல்லி அணி அரை இறுதிக்கு முன்னேற இவர் போட்ட அரைச் சதம்தான் காரணம்.
ஹைதராபாத் அணியின் வேணுகோபால ராவ், டெல்லி அணியின் ஷிகார் தவான் ஆகியோரும் இத்தொடரில் சிறப்பாக ஆடினர். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய அணி விவரம்:
எம்.எஸ்.டோணி (கேப்டன்), கம்பீர், ஷேவாக், யுவராஜ் சிங் (துணை கேப்டன்), ராபின் உத்தப்பா, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், இர்பான் பதான், ஸ்ரீசாந்த், இஷாந்த் சர்மா, பிரவீன் குமார், ஆர்.பி.சிங், பியூஷ் சாவ்லா, பிரக்யான் ஓஜா.