
பாகிஸ்தானுடன் நடந்த 3 ஒரு நாள் போட்டிகளில் 2 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது இந்தியா. 3வது போட்டியிலும் கூட இந்திய பிரமாதமாக ஆடவில்லை. ஆனால் பந்து வீச்சில் கடைசி நேரத்தில் திடீரென திருப்பம் ஏற்பட்டதால் இந்தியா வென்றது.
இப்போட்டியில் இந்தியத் தரப்பில் பேட்டிங்கில் டோணிதான் அதிகபட்சம் 36 ரன்களை எடுத்திருந்தார். அதேசமயம், விக்கெட் கீப்பிங்கில் அவர் சிறப்பாக செயல்பட்டதாக கூற முடியாது. ஆனால் போட்டி முடிவில் அவருக்குத்தான் மேன் ஆப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
கிரிக்கெட் வர்னணையாளர்கள் குழுவால்தான் ஆட்ட நாயகன் விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுகிறார். அவர்கள் ஒருமனதாக டோணியை ஆட்டநாயகனாக தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து ஒரு முன்னாள் வீரர் கூறுகையில், டோணியை உற்சாகப்படுத்தவும், தொய்ந்து போய் வரும் அவரது விளையாட்டுத்திறனுக்கு உற்சாகம் தரும் வகையிலும் இந்த விருதை அவருக்குத் தர தீர்மானித்தோம் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் ரவீந்திர ஜடேஜாவுக்குத்தான் ஆட்ட நாயகன் விருது கிடைக்கும் என முன்னதாக அனைவரும் எதிர்பார்த்தனர். அவர் பேட்டிங்கில் 27 ரன்கள் எடுத்திருந்தார். அருமையாக பந்து வீசி உமர் அக்மல் என்ற முக்கியமான விக்கெட்டை வீழ்ித்தியிருந்தார். அருமையான கேட்ச் ஒன்றையும் பிடித்திருந்தார். போட்டி முழுவதும் நன்றாக பீல்டிங்கும் செய்திருந்தார்.
அதேபோல பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பேட் செய்த நசீர் ஜாம்ஷெட், இந்திய பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோரது பெயர்களும் ஆட்ட நாயகன் விருதுக்கு அடிபட்டது குறிப்பிடத்தக்கது.