சென்னை: முன்னணி வீரர்களை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தி வந்த இந்திய இளம் வீரர் சோம்தேவ் தேவர்மன், சென்னை ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், குரோஷிய வீரர் மலின் சிலிக்கிடம் போராடித் தோல்வியுற்றார்.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் வைல்ட் கார்ட் வீரராக நுழைந்தவர் சோம்தேவ். ஆனால் இவா கார்லோவிக், கார்லஸ் மோயா ஆகிய முன்னணி வீரர்களை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அரை இறுதிப் போட்டியில் முன்னணி வீரர் ஷட்லர் விலகிக் கொண்டதால் வாக் ஓவர் பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தார்.
இறுதிப் போட்டியில் வலுவான குரோஷிய வீரர் சிலிக்கையும் வீழ்த்துவாரா சோம்தேவ் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அதற்கேற்ப படு விறுவிறுப்பாக இருந்தது போட்டி. முதல் சுற்றில், 4-6 என்ற கணக்கில் சோம்தேவ் இழந்தார். ஆனால் அடுத்த சுற்றில் கடும் போட்டியைக் கொடுத்தார்.
இதனால் செட் டை பிரேக்கருக்குப் போனது. இதில் கடுமையாக போராடிய சிலிக், 7-6 (3) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
போட்டியில் தோல்வியுற்றாலும் கூட போராடித் தோற்ற சோம்தேவுக்கு ரசிகர்கள் உற்சாக கரவொலி எழுப்பிப் பாராட்டினர். பின்னர் பேசிய சிலிக்கும், சோம்தேவின் அபார திறமையை பாராட்டத் தவறவில்லை.