பல்லகெலே: இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையை சொந்த மண்ணில் முதல் முறையாக தென்னாப்பிரிக்கா வீழ்த்தியிருக்கிறது.
இலங்கையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் அஜந்தா மென்டிஸ் 3 விக்கெட்டுகளும், திசரா பெரேரா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர். இந்த தடுமாற்றம் கடைசிவரை நீடித்தது. இலங்கை அணியின் திசரா பெரேரா மட்டுமே வெளுத்து வாங்கிக் கட்டினார். அவர் 49 பந்துகளில் 65 ரன்களைக் குவித்தார். அதுவும் தென்னாப்பிரிக்காவின் பீட்டர்சனி ஒரே ஓவரில் 5 சிக்சர் ஒரு பவுண்டரி விளாசியிருந்தார் பெரேரா. அத்துடன் ஒரு வைடும் வீச ஒரே ஓவரில் 35 ரன்கள் கிடைத்தது. ஆனாலும் திசர பெரேராவின் இந்த ஆட்டம் கை கொடுக்கவில்லை.
இலங்கை அணி 43.2 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கையை சொந்த மண்ணில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தென்னாப்பிரிக்கா முதல் முறையாக வீழ்த்தியிருக்கிறது. இதுவரை இர் அணிகளுக்கு இடையே இலங்கையில் நடைபெற்ற போட்டிகளின் எண்ணிக்கை 14. இதில் தென்னாப்பிரிக்கா 2 முறைதான் வென்றிருக்கிறது. தொடர்ச்சியாக 11 போட்டிகளில் தோல்வியை தழுவியது,.
5 போட்டிகளைக் கொண்ட நடப்பு தொடரில் இலங்கை 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.