
ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கி கைதாகியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான அஜித் சண்டிலா, இந்தப் போட்டியின் முடிவை சரியாக கணித்து புக்கிகளிடம் தெரிவித்து பணம் பெற்றுள்ளார். எனவே இந்தப் போட்டியும் பிக்ஸ் செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டெல்லி போலீஸாரிடம் சிக்கிய புக்கி ஒருவர் மூலம் இந்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. இந்தப் போட்டியின் வெற்றியைக் கணித்தால் ரூ. 30 லட்சம் தரப்படும் என சண்டிலாவிடம் கூறப்பட்டதாம். அவரும் வெற்றியை சரியாக சொல்லியுள்ளார். ஆனால் பேசியபடி தராமல் ரூ. 2 லட்சம் மட்டுமே தந்தார்களாம் புக்கிகள்.
இந்தத் தகவல்களை நோய்டாவில் போலீஸாரிடம் சிக்கிய புபேந்திர சிங் நகர் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் ஒரு சூதாட்ட புக்கி ஆவார். இவர் கொடுத்த தகவலின் பேரில் சையத் அகமது, சுனில் சக்ஸேனா ஆகிய இரு புக்கிகள் ஹைதராபாத்தில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
புபேந்திர சிங் நகர் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு பெரிய கிளப்பில் மேனேஜராக இருக்கிறார். இந்த கிளப்புக்கு அஜித் சண்டிலா அடிக்கடி வருவாராம். அப்போதுதான் நகருக்கும், சண்டிலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம்.
ஐபிஎல் போட்டிகளில் சண்டிலா எப்படியெல்லாம் பி்க்ஸிங் செய்தார் என்ற முழு விவரமும் நகருக்குத் தெரிந்துள்ளது. அதையெல்லாம் போலீஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இவரும் விக்கி என்ற புக்கியும், சண்டிலாவை ஜெய்ப்பூரில் வைத்து சந்தித்துள்ளனர். அப்போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே மே 12ம் தேதி நடந்த போட்டியின் முடிவை சரியாக கணித்துக் கூற முடியுமா என்று கேட்டுள்ளனர். சண்டிலாவும், கொல்கத்தாத அணியே வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
அவருக்கு ரூ. 30 லட்சம் தருவதாக விக்கி உறுதியளித்துள்ளார். அட்வான்ஸாக ரூ. 2 லட்சமும் கொடுத்துள்ளார். ஆனால் சண்டிலா முடிவை சரியாக தெரிவித்தும் கூட சொல்லியபடி மீதப் பணத்தை விக்கி தரவில்லையாம்.
இதற்குக் காரணம், கொல்கத்தா வென்றாலும் கூட மிகவும் குறைந்த ஸ்கோரை அது எடுத்ததே. பெரிய ஸ்கோரை எட்டும் என்று பெட் கட்டப்பட்டதால், புக்கிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். இதனால்தான் மீதப் பணத்தை சண்டிலாவுக்கு அவர்கள் தரவில்லையாம். மாறாக, சண்டிலாவுக்குத் தர வேண்டிய பணத்தை நகரும், விக்கியுமே ஆளுக்குப் பாதியாக பங்கு போட்டு எடுத்துக் கொண்டனராம்.