டெல்லி: இந்திய அழகியுடன் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டு நடுவர் அசத் ராஃப் திடீரென சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ராஃபுக்கும், ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் சர்ச்சையில் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
ராஃப் செயல்பாடுகள் குறித்து தற்போது விசாரணையும் நடந்து வருகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட பலர் ஸ்பாட் பிக்ஸிங் புகாரின் கீழ் சிக்கி கைதாகியுள்ளனர். இந்த நிலையில் தற்போது ராஃப் மீது சந்தேகப் பார்வை விழுந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்தே அவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து ஐசிசி நீக்கியுள்ளது.

மும்பை போலீஸாரின் விசாரணையின் கீழ் ராஃப் இருப்பதால் அவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து விலக்கி வைப்பதாக ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜசாகா அசரப் கருத்து தெரிவிக்கையில், ராஃப் தவறு செய்திருப்பார் என நான் கருதவில்லை என்றார்.
ராஃப் ஏற்கனவே இந்திய அழகி லீனா கபூருடன் இணைத்துப் பேசப்பட்டவர் ஆவார். ராஃப் மீது பல்வேறு செக்ஸ் புகார்களை லீனா கபூர் அடுக்கியிருந்தார். ஆனால் அதை ராஃப் பின்னர் நிராகரித்தார், மறுத்தார்.