
ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் வீரர்கள், புக்கிகள், பாலிவுட் நடிகர் இதற்கும் மேலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் என பலரும் சிக்கி கைதாகினர். இன்னும் எத்தனை தலைகள் உருளுமே என்ற நிலைமையும் உள்ளது. குருநாத் மெய்யப்பன் கைதானால் அவரது மாமனாரான பிசிசிஐ தலைவர் சீனிவாசன் ராஜினாமா செய்தாக வேண்டும் என்ற நெருக்கடியும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் அனேகம் நாளை ராஜினாமா செய்யக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சீனிவாசனுக்கு முன்பாக ஐபிஎல் தலைவரான ராஜிவ் சுக்லா இன்று தமது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஐபிஎல் பிக்ஸிங் சர்ச்சைகளைத் தொடர்ந்து தாம் பதவியில் இருந்து விலகுவதாக ராஜிவ் சுக்லா அறிவித்துள்ளார். அவர் ஏற்கெனவே அடுத்த ஆண்டு ஐபிஎல் தலைவர் பதவியில் இருக்கமாட்டேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.