386 ரன்கள் இலக்கு - ஷேவாக் அதிரடி - வெல்லுமா இந்தியா?
சென்னை: சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 386 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது. ஷேவாக் பட்டாசாகப் பொறிந்து 83 ரன்களைக் குவித்தார். கடைசி நாளான நாளை இந்தியா விளையாடுவதைப் பொறுத்தே இதில் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்குமா என்பது தெரியும்.
சென்னையில் நடந்த வரும் முதல் டெஸ்ட் போட்டி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 316 ரன்களைக் குவித்தது. ஸ்டிராஸ் சதமடித்தார்.
ஆனால் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 241 ரன்களுக்கு பறி கொடுத்தது. டோணியும், ஹர்பஜன் சிங்கும் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி ஆடினர்.
இதையடுத்து இங்கிலாந்து தனது 2வது இன்னிங்ஸை தன்னம்பிக்கையுடன் தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் சதம் போட்ட ஸ்டிராஸ், 2வது இன்னிங்ஸிலும் அபாரமாக ஆடி சதமடித்தார். 108 ரன்களை அவர் குவித்து இங்கிலாந்து அணி வலுவான நிலையை எட்ட உதவினார்.
அதேபோல பால் காலிங்வுட்டும் அற்புதமான சதம் போட்டு இங்கிலாந்தை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். இவரது பங்கு 108 ரன்கள். மற்றவர்கள் பெரிய அளவில் ஆடவில்லை.
இந்த நிலையில் 311 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து தனது 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற 386 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து இந்தியா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் சொதப்பிய ஷேவாக்கும், கம்பீரும் 2வது இன்னிங்ஸில் பிரமாதமாக ஆடினர்.
குறிப்பாக ஷேவாக் அதிரடி ஆட்டத்தைக் காண்பித்தார். ஷேவாக் சிறப்பாக ஆடி அரை சதத்தைத் தாண்டினார். 83 ரன்களைக் குவித்து விட்டு அவர் ஓய்ந்தார். இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி சற்று குறைந்தது.
கம்பீர் மறு முனையில் விக்கெட் விழுந்து விடாமல் மிக கவனமாக ஆடினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 41 ரன்களுடன் அவர் ஆடிக் கொண்டிருக்கிறார். ராகுல் டிராவிட் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இன்றைய ஆட்ட நேர இறுதியில், ஒரு விக்கெட் இழப்புக்கு இந்தியா 131 ரன்கள் எடுத்துள்ளது. 255 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி பெறும். ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், டோணி, யுவராஜ் சிங் ஆகியோரின் ஆட்டத்தைப் பொறுத்தே இந்தியா வெற்றி பெறுமா, இல்லையா என்பது தெரிய வரும்.


Click it and Unblock the Notifications