சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த விறுவிறுப்பான 20-20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.
ஐபிஎல் 20-20 தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியைக் காண பெருமளவில் ரசிகர்கள் திரண்டிருந்ததால், வங்கக் கடல், சேப்பாக்கம் மைதானத்திற்குள் நுழைந்து விட்டதோ என்று கூறும் அளவுக்கு மக்கள் வெள்ளமாக இருந்தது.
உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சென்னை அணி களம் இறங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி, சென்னை அணியை முதலில் பேட் செய்ய பணித்தது. இந்தப் போட்டியிலும் மும்பை கேப்டன் சச்சின் டெண்டுல்கர் விளையாடவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
சென்னை அணியின் சார்பில் பார்த்திவ் படேலும், மாத்யூ ஹைடனும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். படேல் 14 ரன்களில் அவுட் ஆகி விட்டார். ஆனால் ஹைடன் அடித்து நொறுக்கி ரன்களைக் குவித்தார்.
46 பந்துகளை மட்டுமே சந்தித்த ஹைடன் 81 ரன்களைக் குவித்து ரன் அவுட் ஆனார்.
அதேபோல சுரேஷ் ரெய்னாவும் 37 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டோணியும் தன் பங்குக்கு 16 பந்துகளில் 30ரன்களைக் குவித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
இறுதியில், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 208 ரன்களைக் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
பின்னர் ஆடிய மும்பை அணி, சென்னை அணிக்கு சவால் விடும் வகையில் ரன்களை சேர்க்க ஆரம்பித்தது. ஜெயசூர்யா மின்னல் வேகத்தில் 20 ரன்களைக் குவித்தார். ராபின் உத்தப்பா அதிரடியாக ஆடி 43 ரன்களைச் சேர்த்தார். பிரேவா 24, நாயர் 45, ஹர்பஜன் சிங் 28 என ரன்கள் குவிந்தன.
மும்பை அணி வென்று விடுமோ என்ற நிலை ஒரு கட்டத்தில் ஏற்பட்டது. இருப்பினும் சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் அதைத் தடுத்து மும்பை அணியை 202 ரன்களில் நிறுத்தி விட்டனர். இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
சென்னை அணியில் அதிகபட்சமாக முத்தையா முரளீதரன் 2 விக்கெட்டுக்ளை வீழ்த்தினார். ஜோகிந்தர் சர்மாவுக்கு 2 விக்கெட்டுகளும், கோனி, அமர்நாத் ஆகியோருக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.
மாத்யூ ஹைடன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
நேற்றைய போட்டியை ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். சென்னை அணியின் நட்சத்திர தூதுவர் நடிகர் விஜய் சென்னை அணியின் சீருடையில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
டிரம்ஸ் சிவமணி, பாடகர் ஹரிஹரன் ஆகியோர் தங்களது பாடல் மற்றும் இசையால் வெயிலில் வாடி வதங்கிப் போயிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.