
ஜூன் 2ம் தேதி சவானின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் அவர் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டு கைதாகி விட்டார். இந்த நிலையில் அவர் ஜாமீன் கோரி டெல்லி மெட்ரோபாலிடன் கோர்ட்டில் மனு செய்திருந்தார். நேற்று போலீஸ் காவல் முடிந்ததும் கோர்ட்டில் சவான் உள்ளிட்டோர் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
அப்போது சவானின் ஜாமீன் மனுவும் விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதி லோகேஷ் குமார் சர்மா, இங்க சமூக சென்டிமென்ட்டுக்கெல்லாம் இடமில்லை. இந்த சமயத்தில், சவானுக்கு ஜாமீன் தர நான் விரும்பவில்லை என்று கூறி மனுவை டிஸ்மிஸ் செய்து விட்டார்.
இதைக் கேட்டு சவான் பெரும் அதிர்ச்சியும், சோகமும், கவலையும் அடைந்தார். அதை அவரது முகம் வெளிப்படுத்தியது.
ஜாமீன் கிடைக்காமல் போய் விட்டதால் சவானின் திருமணம் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது காலவரையின்றி தள்ளி வைக்கப்படுமா என்பது தெரியவில்லை.