பெங்களூர்: இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கெளதம் கம்பீர், இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் பெறவில்லை. உடல் தகுதி திறனை நிரூபிக்க வேண்டும் என துணை கேப்டன் எம்.எஸ்.டோணி, ஹர்பஜன் சிங்குக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் வருகிற 26ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் அகமதபாத்தில் ஏப்ரல் 3ம் தேதியும், 3வது போட்டி கான்பூரில் ஏப்ரல் 11ம் தேதியும் தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் பணி நேற்று பெங்களூரில் நடந்தது. இதன் முடிவில் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில், கெளதம் கம்பீர், இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் சேர்க்கப்படவில்லை. டிராவிட், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோருக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
டோணி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் வருகிற 21ம் தேதி உடல் தகுதி சோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதில் அவர்கள் தேறினால் மட்டுமே விளையாட தகுதி பெறுவார்கள். இல்லாவிட்டால் டோணிக்குப் பதில் திணேஷ் கார்த்திக்கும், ஹர்பஜனுக்குப் பதில் பியூஷ் சாவ்லாவும் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று நடந்த தியோதர் டிராபி போட்டியில் பங்கேற்ற, இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்ட முரளி கார்த்திக் காயமடைந்தார். எனவே பியூஷ் சாவ்லாவுக்கு அணியில் இடம் கிடைப்பது உறுதியாகி விட்டது.
அணி வீரர்கள் விவரம்:
அனில் கும்ப்ளே (கேப்டன்), டோணி (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், லட்சுமண், வீரேந்திர ஷேவாக், வாசிம்ஜாபர், யுவராஜ் சிங், இர்பான் பதான், ஹர்பஜன் சிங், ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த், முரளி கார்த்திக்.