லண்டன்: டுவென்டி-20 உலக் கோப்பை தொடரின் கடைசி சூப்பர்-8 போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. இப்போட்டியில் தென் ஆப்ரிக்கா 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மற்றொரு சூப்பர்-8 போட்டியில் நியூசிலாந்தை வீழத்தி, இலங்கை அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. நேற்று நடந்த சூப்பர்-8 போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
துவக்க வீரர்களாக கிப்ஸ், ஸ்மித் வந்தனர். கிப்ஸ் 5 ரன்களுக்கு ஆர்பி சிங் பந்தில் போல்டானார். அடுத்து வந்த டிவிலியர்ஸ், ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். ஸ்மித் 26 ரன்களுக்கு அவுட்டானார். டிவிலியர்ஸ் 51 பந்தில் 63 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து வந்த டுமினி 10, பவுச்சர் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை சேஸ் செய்த இந்தியாவுக்கு ரோஹித், கம்பீர் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 48 ரன்கள் எடுத்தநிலையில் கம்பீர் 21 ரன்களுக்கு அவுட்டானார். இவரை தொடர்ந்து ரெய்னா 3, ரோஹித் 29 ரன்களுக்கு வரிசையாக வெளியேறினர். இதையடுத்து இந்தியாவின் சரிவு துவங்கியது.
பொறுப்பில்லாமல் பேட் செய்த டோணி (5), யூசுப் பதான் (0) விரைவில் அவுட்டாயினர். இறுதியில் இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து 12 ரன்களில் தோற்றது. இதையடுத்து சூப்பர்-8 போட்டியில் விளையாடிய ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் இந்திய அணி வெறுங்கையுடன் விரைவில் நாடு திரும்ப இருக்கிறது.
அரையிறுதியில் இலங்கை...
மற்றொரு சூப்பர்-8 போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த நியூசிலாந்து 17 ஓவரில் 110 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியது.
நாளை 18ம் தேதி நடக்கும் முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை பலப்பரீட்சை செய்கின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் வரும் 21ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் பைனலில் மோதுவார்கள்.
டோணியைக் கிண்டலடித்த ரசிகர்கள்:
சூப்பர் எட்டு ஆட்டங்களில் தொடர்ந்து 3 தோல்விகளை வாரிக் கட்டிக் கொண்டதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியை, நாட்டிங்காமில் இந்திய ரசிகர்கள் கிண்டலடித்து கேலி செய்தனர்.
ஆனால் இதுபோன்ற கேலியும், கிண்டலும் தன்னை எந்த வகையிலும் பாதிக்காது என்று டோணி துடைத்தெறிந்து விட்டார்.
நேற்று கடைசியாக நடந்த 3வது சூப்பர் எட்டு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 12 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இதனால் போட்டியைக் காண வந்த ரசிகர்கள் வெறுத்துப் போய் விட்டனர்.
இந்த நிலையில் போட்டி முடிவில் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது டோணியை, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கேலி செய்து கிண்டலடித்தனர்.
இதுகுறித்து டோணி கூறுகையில், இதுபோன்று கேலி செய்வது முதல் முறையல்ல. 2007ல் உலகக் கோப்பையை நாங்கள் இழந்தபோதும் கூட என்னைக் கிண்டலடித்தனர். ஏன், எனக்கு இறுதி மரியாதை கூட அப்போது செய்து விட்டனர்.
இதற்காக நான் வருத்தப்படவில்லை. ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதன் வெளிப்பாடே இது. இது என்னை பாதிக்காது.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு மூத்த வீரர் என்னிடம் கூறினார். யாராவது உன்னைப் பாராட்டினால் உடனே சொர்க்கத்துப் போய் விடாதே. நீ ஒருவேளை கீழே விழுந்தால், அது உனக்கு நல்லதல்ல. எனவே எப்போதும் ஒரே மாதிரியாக இரு என்று கூறினார். அவ்வாறே இருக்க நானும் முயற்சிக்கிறேன் என்றார் டோணி.