டெல்லி: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அனில் கும்ப்ளேவையே வைத்துக் கொள்வதா அல்லது ஒருநாள் அணியின் கேப்டன் டோணியிடம் அப்பொறுப்பை கொடுப்பதா என்ற குழப்பத்தில் இந்திய தேர்வுக் குழு ஆழ்ந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி வீரர்கள், இவ்வார இறுதியில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இந்த நிலையில் டெஸ்ட் கேப்டனாக கும்ப்ளேவை நீடிப்பாரா அல்லது டோணியிடம் அப்பொறுப்பு கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேப்டன் பொறுப்பை கும்ப்ளே சிறப்பாகவே செய்து வருகிறார். அவரது தலைமைப் பொறுப்பில் ஒரு குறையும் இல்லாமலேயே இருக்கிறது. இருந்தாலும் டோணியின் ஆதரவாளர்கள், கும்ப்ளேவின் வயதைக் காரணம் காட்டி அவர் பதவி விலகுவது கெளரவமானது என்று கூறி வருகின்றனர்.
கும்ப்ளேவுக்கு அடுத்த மாதம் 38 வயதாகிறது. டோணிக்கோ 27தான் நடக்கிறது. எனவே கும்ப்ளே டோணிக்கு வழி விட வேண்டும். ஒரு நாள் போட்டி, டுவென்டி 20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் டோணி, டெஸ்ட் போட்டிகளையும் சிறப்பாக வழி நடத்துவார் என அவர்கள் வாதிடுகிறார்கள்.
ஆனால் புள்ளி விவரங்கள் டோணிக்கு எதிராக உள்ளன. சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் டோணி பங்கேற்கவில்லை. டயர்டாக இருக்கிறது என்று கூறி ரெஸ்ட் எடுத்துக் கொண்டார்.
மேலும் கடந்த கோடை காலத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரிலும் அவர் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை. மொத்தமே 141 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரது பேட்டிங் சராசரி 17.62 தான்.
அதேசமயம், கும்ப்ளே கேப்டன் பொறுப்பை சிறப்பாக செய்ததுடன், 20 விக்கெட்களையும் அள்ளினார். கூடவே ஆஸ்திரேலிய வீரர்களால் எழுந்த சர்ச்சைகளையும் சாதுரியமாக எதிர்கொண்டு அழகாக சமாளித்து பேஷ் பேஷ் வாங்கினார்.
எனவே தற்போதைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபி போட்டித் தொடரிலும் கும்ப்ளேவே கேப்டனாக நீடிக்க வேண்டும் என பலத்த ஆதரவு காணப்படுகிறது.
இதை உணர்ந்துள்ள டோணி புத்திசாலித்தனமாக, நான் கேப்டன் பதவி குறித்து கனவு காணவில்லையே என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதுமாதிரியான விஷயங்களுக்கு நான் அதிக கவனம் செலுத்துவதில்லை. அதில் அர்த்தமும் இல்லை. விளையாடுவதே எனக்கு மகிழ்ச்சியானது.
எதையுமே நான் எதிர்பார்ப்பதில்லை. இந்தியாவுக்காக விளையாடுவேன் என நான் எதிர்பார்த்ததில்லை. ஆனால் நடந்தது. கேப்டனாவேன் என்று நினைத்ததில்லை. அதுவும் நடந்தது.
எனவே எதுவாக இருந்தாலும் அதுவாகவே வரட்டும். அதுபற்றி கவலைப்படுவது எனது வேலை அல்ல.
ஆஸ்திரேலிய தொடர் மிகவும் கடினமானதாக இருக்கும். இரு அணிகளுக்கும் இது சவாலான தொடர்தான். எனவே அனைத்து வீரர்களும் ஆட்டம் குறித்துத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
கும்ப்ளேவின் தலைமையில் விளையாடுவதை நான் பெருமையாக கருதுகிறேன். மிகச் சிறந்த லீடர் அவர் என்று கூறியுள்ளார் டோணி.