
அமெரிக்காவில் கிரிக்கெட்
இந்தியாவில் கிரிக்கெட் போல் அமெரிக்காவில் ஃபுட்பால் ( நம்மூர் கால்பந்து அல்ல) போட்டி தான் மிகப் பிரபலமாகும். நம்ம கிரிக்கெட் ப்ளேய்யர்களை விட, அமெரிக்க ஃபுட்பால் வீரர்கள் பல மடங்கு வருமானம் கொண்டவர்கள், பிரசித்து பெற்றவர்கள். கூடைப்பந்து மற்றும் பேஸ்பால் என்றழைக்கப்படும் விளையாட்டும் அடுத்து இடம் பெறுபவையாகும். இதில் பேஸ்பால் ஒரளவு கிரிக்கெட்டை ஒத்து இருக்கும் விளையாட்டாகும். பள்ளிகளில் இந்த மூன்று விளையாட்டுகளே மாணவர்களுக்கு சாய்ஸ் ஆகும்.

கல்லி கிரிக்கெட்
இந்தியா உள்ளிட்ட தெற்காசியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா போன்ற கிரிக்கெட் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசித்து வருபவர்களுக்கு கிரிக்கெட் மீது தணியாத தாகம் உண்டு. ஆங்காங்கே கல்லி கிரிக்கெட் என்ற அளவில் வாரம் தோறும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. யுனிவர்சிட்டியில் பயிலும் இந்திய மாணவர்களும், பல்கலைக் கழக வளாகத்திலேயே கிரிக்கெட் ஆடிவருகிறார்கள். ஒரு சில இண்டெர் யுனிவர்சிட்டி போட்டிகளும் நடைபெறுவது உண்டு.

மேரிலாண்டில் முறைப்படி பயிற்சி – போட்டிகள்
இங்கிருந்து அங்கே போனவர்கள் எல்லாம் தங்கள் ஏக்கத்திற்காக விளையாடிக் கொள்கிறார்களே தவிர, அடுத்த தலைமுறையினர் கிரிக்கெட் பயிற்சி பெற சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. மேரிலாண்ட் யூத் கிரிக்கெட் தொண்டு நிறுவனம், மேரிலாண்ட் முழுவதும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில் பயிற்சி அளித்து வருகிறது. நானூறுக்கும் மேற்பட்ட மேரிலாண்ட் பள்ளிகளில் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சமீபத்தில் மாநில அளவிலான இளைஞர் கிரிக்கெட் போட்டி ஜெர்மன் டவுணில் நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள அனைத்து அணிகளுக்கும் லீக் ஆட்டம் மூலம் போட்டி நடைபெற்று, இறுதிப் போட்டியை டாக்டர் ராஜன் நடராஜன் டாஸ் போட்டு தொடக்கி வைத்தார். உடன் மேரிலாண்ட் யூத் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் கலந்து கொண்டார்

அமெரிக்காவில் முதலிடம் மேரிலாண்ட்
டாக்டர் ராஜன் நடராஜன் பேசுகையில், "அமெரிக்காவிலேயே கிரிக்கெட் விளையாட்டிற்கு சிறப்பு இடம் கொடுத்து மேரிலாண்ட் ஊக்குவித்து வருகிறது. கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் அரசு உதவி செய்து வருகிறது. இதன் மூலம் அமெரிக்க மாகாணங்களிலேயே மேரிலாண்ட் கிரிக்கெட்டில் முதலிடம் வகிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், ஆந்திர மாநிலத்திற்கும் மேரிலாண்டிற்கும் இடையேயான சகோதர மாநில உடன்பாட்டில் கையெழுத்திட்ட கவர்னர் மார்ட்டின் ஒ மைலி, மேரிலாண்டில் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கும் உறுதி அளித்திருந்தார்.
கவர்னரும் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியும், தத்தம் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டுகளை மாற்றிக்கொண்டனர். அமெரிக்காவும் உலக கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் நாள் வெகு தூரம் இல்லை. அதற்கு இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பெரும் பங்காற்றுவார்கள் என நம்புகிறேன். அமெரிக்காவில் கிரிக்கெட்டின் தலைநகரமாக மேரிலாண்ட் விளங்கும்," என்று டாக்டர் ராஜன் நடராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

சர்வதேச அளவில்...
இதுவரையிலும் மேரிலாண்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் மேரிலாண்டில் நடைபெற்றுள்ளது. துணைச் செயலாளர் டாக்டர் ராஜன் நடராஜன் மேரிலாண்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு தனிக்கவனம் எடுத்து வருவதும் குறிப்பிடத் தக்கதாகும்.
கிரிக்கெட்டை அமெரிக்காவில் மேலும் பிரபலப் படுத்துவதற்காகவும், சர்வதேச அளவில் போட்டியில் இடம்பெற வைப்பதற்காகவும் அவர் பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறார். கூடிய விரைவில் அமெரிக்கத் தமிழர்கள் இந்திய அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களம் இறங்கினால் ஆச்சரியமில்லை.


Click it and Unblock the Notifications











