
ஐபிஎல் பெரும் பணம் கொழிக்கும் போட்டியாக மாறியதற்கு மோடிதான் முதல் காரணம். இவர்தான் இந்த விளையாட்டை பெரும் ஆடம்பர, கவர்ச்சிப் பொருளாக மாற்றியவர். பெருமளவில் நிதி மோசடி செய்தது தொடர்பாக இவர் மீது வழக்குகள் உள்ளன. இதையடுத்து லண்டனுக்கு ஓடி விட்டார்.
விசாரணைக்கு கூப்பிட்டால் கூட வர மாட்டேன் என்று வம்படியாக அங்கேயே இருக்கிறார். இந்த நிலையில் ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் இவர் கிரிக்கெட் வாரியத்தை ஒரு பிடி பிடித்துள்ளார்.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சஹாரா ஸ்பான்சர், ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் என பல பிரச்சினைகளில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் போக்கு மகா மோசமாக இருக்கிறது. சஹாரா நிறுவனம் ஸ்பான்சரிலிருந்து விலகுவது மிகப் பெரிய பின்னடைவு. கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அத்தனை பேரும் விலக வேண்டும்.
இவர்கள் பதவியில் நீடிக்கவே தகுதி இல்லாதவர்கள். அதற்கான காரணங்கள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகின்றன.
சீனிவாசனின் சுயநலப் போக்குதான் இன்று ஐபிஎல்லுக்குக் கெட்ட பெயர் ஏற்பட முக்கியக் காரணம். இதை நான் பல காலமாக சொல்லி வருகிறேன். உண்மையில் இப்போது ஐபிஎல்லின் வருமானம் குறைய ஆரம்பித்துள்ளது.
ஐபிஎல் கமிஷனரின் அதிகாரங்களை யாரும் குறைக்க முடியாது. அதற்கு சீனிவாசன் உள்பட யாருக்கும் அதிகாரம் கிடையாது. இப்போது ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக அதன் கமிஷனர் ஒரு பதிலும் பேசாமல் இருக்கிறார். பணம் கொடுத்து ஸ்டேடியங்களை நிரப்பும் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் மோடி.