ராஞ்சி: இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக ராஞ்சியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டோணி ரூ. 50 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் கடத்திச் சென்று கொலை செய்வோம் என கூறி டோணியின் வீட்டுக்கு தஸ்லிம் என்ற நபரின் பெயரில் இரு மிரட்டல் கடிதங்கள் வந்தன.
மும்பையைச் சேர்ந்த தாவூத் கூட்டத்தைச் சேர்ந்த யாரோதான் இதை அனுப்பியிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. அதேசமயம், உள்ளூரைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் போலீஸாருக்கு இருந்தது.
இதுகுறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. இதில் உள்ளூரைச் சேர்ந்த 3 பேர் சிக்கியுள்ளனர். வியாழக்கிழமை இரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களது பெயர்கள் ரஞ்சித், சாதிக், பர்வேஸ் ஆகும். கடிதத்தை அனுப்பிய தஸ்லீம் என்பவரின் வீட்டையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், உண்மையில் இந்தக் கடிதத்தை தஸ்லீம்தான் எழுதினாரா என்ற கோணத்திலும், தஸ்லீமுக்கு எதிரான கும்பல் விடுத்த மிரட்டலா என்ற கோணத்திலும், அல்லது இது விளையாட்டுத்தனமாக விடுக்கப்பட்ட மிரட்டலா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது என்றார் அவர்.
ராஞ்சியைச் சேர்ந்த தாதா சுரேந்திர பெங்காலி என்பவரின் நெருங்கிய கூட்டாளிதான் தஸ்லிம் என்பது தெரிய வந்துள்ளது. பெங்காலி தற்போது ஹசாரிபாக் மத்திய சிறையில், ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
90களிலேலேய தஸ்லீம் ராஞ்சியை விட்டுப் போய் விட்டாராம். தற்போது தாவூத் கும்பலில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.