சென்னை: இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 26ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வருகிற 21ம் தேதி இந்தியா வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. குறைந்தபட்சமாக ரூ. 200ம், அதிகபட்சமாக ரூ. 7500 எனவும் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் வாங்குவதற்காக நேற்று இரவு முதலே ரசிகர்கள் மைதான டிக்கெட் கவுண்டர்கள் முன்பு வரிசையில் காத்திருந்தனர். இன்றுகாலை விற்பனை தொடங்கியதும் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்கிச் சென்றனர். கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பாதுகாப்புக்கு போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அணி வீரர்கள் தேர்வு இன்னும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.