லண்டன்: இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடப்பது உறுதியாகி விட்டது. முழு அளவிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சிக்காக அபுதாபி கிளம்பிச் சென்றது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர், மும்பை தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி இங்கிலாந்து அணி தாயகம் திரும்பியது. மேலும் டெஸ்ட் தொடர் நடக்குமா என்பதிலும் சந்தேகம் எழுந்தது.
இங்கிலாந்து அணி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று இரு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும் இடத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் மாற்றியது. முதல் டெஸ்ட் சென்னையிலும், 2வது டெஸ்ட் மொஹாலியிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் சில மூத்த வீரர்கள் வரத் தயக்கம் காட்டியதால் இங்கிலாந்து அணி திட்டமிட்டபடி டெஸ்ட் தொடரில் பங்கேற்குமா என்பதில் இழுபறி நிலவி வந்தது.
ஆனால் தற்போது தொடர் திட்டமிட்டபடி நடைபெறுவது உறுதியாகி விட்டது. அனைத்து வீரர்களுடனும் இங்கிலாந்து அணி பயிற்சிக்காக அபுதாபி கிளம்பியுள்ளது. அங்கிருந்து அவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள்.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,கிட்டத்தட்ட 72 மணி பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர், இங்கிலாந்து அணி இந்தியப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
அதன்படி தற்போது இங்கிலாந்து அணி அபுதாபி சென்றுள்ளது. அங்கிருந்து தங்களது இந்தியப் பயணத்தை இங்கிலாந்து வீரர்கள் தொடருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் 9 வீரர்களுடன் அபுதாபியில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி மேற்கொள்வார்கள். பின்னர் முழு அணியும் அடுத்த வார தொடக்கத்தில் இந்தியா கிளம்பிச் செல்லும்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் டிசம்பர் 11ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி மொஹாலியில் 19ம் தேதி தொடங்கும்.
முன்னதாக இந்த இரு டெஸ்ட் போட்டிகளும் முறையே மும்பை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி அறிவிப்பு-மீண்டும் யுவராஜ் சிங்:
இதற்கிடையே, டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் தொடரில் கலக்கிய யுவராஜ் சிங்குக்கு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கங்குலி இடத்தை அவர் நிரப்புவார்.
அதேபோல இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவும் மீண்டும் வருகிறார்.
கேப்டன் டோணி, தேர்வுக் குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழுவினர் இன்று சென்னையில் கூடி தீவிர ஆலோசனைக்குப் பின்னர் அணியைத் தேர்வு செய்தனர்.
கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் யுவராஜ் சிங் விளையாடினார். அதன் பின்னர் அவர் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறாமல் இருந்து வந்தார்.
ஆனால் பாதியில் கைவிடப்பட்ட இங்கிலாந்து ஒரு நாள் தொடரில் அவர் இரு செஞ்சுரிகளை அடித்து அசத்தினார். இதனால் கங்குலியால் காலியான இடம் யுவராஜுக்குக் கிடைத்துள்ளது.
இந்திய அணி விவரம்: டோணி (கேப்டன்),வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ் சிங், அமீத் மிஸ்ரா, ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், இஷாந்த் சர்மா, பத்ரிநாத், முனாப் படேல், எம்.விஜய், பிரக்யான் ஓஜா.