
சாதனை படைப்பது சச்சினுக்குப் புதிதல்ல. அவர் நிகழ்த்தாத சாதனை எது என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த நிலையில் ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் புதிய இரண்டு சாதனைகளுக்கு அவர் தயாராகி வருகிறார்.
சனிக்கிழமை மும்பை வாங்கடே மைதானத்தில் மும்பை மற்றும் செளராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில்தான் இந்த இரண்டு புதிய சாதனைகளை சச்சின் நிகழ்த்தப் போகிறார்.
25,000 ரன்கள்
இந்திய வீரர்களிலேயே இதுவரை சுனில் கவாஸ்கர் மட்டுமே அதிக அளவிலான முதல் தர ரன்களைச் சேர்த்துள்ளார். அவர் 348 போட்டிகளில் 25,834 ரன்களைச் சேர்த்துள்ளார். டெண்டுல்கர் 24,874 ரன்களை எடுத்துள்ளார்.
இந்த நிலையில், நாளை தொடங்கும் இறுதிப் போட்டியில் சச்சின் 25,000 ரன்களைத் தாண்டி 25,000 ரன்கள் குவித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 126 ரன்கள் எடுத்தால் இந்த புதிய சாதனையைப் படைக்கும் வாய்ப்பு சச்சினுக்குக் கிடைக்கும்.
முதல் தர சத சாதனை
அதேபோல இன்னொரு சாதனையையும் சச்சின் படைக்கக் காத்திருக்கிறார். அதாவது கவாஸ்கர் படைத்துள்ள 81 முதல் தர செஞ்சுரிகளை சமன் செய்யும் வாய்ப்பும் சச்சினுக்குக் காத்திருக்கிறது. தற்போது அவர் 80 முதல் தர சதங்களை வைத்துள்ளார். மேலும் ஒரு சதம் போட்டால் அவர் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்யலாம்.
ஏற்கனவே டாக்காவில் தனது 34 டெஸ்ட் சத சாதனையை டெண்டுல்கர் சமன் செய்தபோது மைதானத்தில் கவாஸ்கரும் இருந்து அதை நேரில் பார்த்தார். மேலும் சச்சினைப் பாராட்டி 34 சாம்பெய்ன் பாட்டில்களையும் பரிசாக அளித்தார். அதேபோல தற்போது தனது முதல் தர சத சாதனையை சச்சின் சமன் செய்யும்போதும் கவாஸ்கர் அதை நேரில் பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.