டெல்லி: இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் வீரர் ககந்தீப் சிங் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்று காலை இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. மீரட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் கிரிக்கெட் வீரர் சிங் தங்கியிருந்தார். இங்கு நடைபெறும் சி.கே.நாயுடு கோப்பைப் போட்டியில் பங்கேற்க அவர் வந்திருந்தார். ஹோட்டலில் தனது நண்பர்களோடு அவர் இருந்தபோது ஹோட்டலின் உரிமையாளருக்கும், இன்னொரு நபருக்கும் இடையை மோதல் வெடித்தது.
அப்போது உரிமையாளருடன் மோதிய நபர் தனது கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் உரிமையாளர் விலகிக் கொண்டு விட்டார். அந்த குண்டு அங்கு அமர்ந்திருந்த ககந்தீப் சிங் மீது பாய்ந்து விட்டது.
குண்டுக் காயமடைந்த ககந்தீப் சிங் உயிரிழந்தார். சமீபத்தில்தான் இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விட்டுத் திரும்பியிருந்தார் ககந்தீப் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.