மும்பை: இந்திய அணி கேப்டன் கும்ப்ளே உடல் தகுதி இல்லாத நிலையில் பெங்களூர் டெஸ்டில் விளையாடியதுதான் இந்த டெஸ்ட் இந்தியாவின் கையைவிட்டு நழுவியதற்குக் காரணம் என முன்னாள் தேர்வுக் குழுத் தலைவர் திலீப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் துவங்கிய கவாஸ்கர் - பார்டர் டிராபிக்கான முதல் டெஸ்டில் கும்ப்ளேயின் பந்துவீச்சு எடுபடவில்லை. முதல் இன்னிங்ஸில் அவரால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸிலும் இதே நிலைதான்.
இதுகுறித்து தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் திலீப் வெங்சர்க்கார் கும்ப்ளேவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
கும்ப்ளேயின் உடல்நிலை முழு தகுதியுடன் இல்லாததே இதற்குக் காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து விசாரித்தபோது பந்து வீச்சுப் பயிற்சியாளர் ராபின் சிங் உண்மையைச் சொல்லாமல் மறைத்துவிட்டார்.
100 சதவிகித உடல் தகுதி இல்லாவிட்டால் எதற்கு அணியில் இடம்பெற வேண்டும்? இந்த மாதிரி காரணங்கள்தான் இந்திய அணியை சரிவுக்குள் தள்ளுகின்றன. தனது உடல்நிலையை முன்கூட்டியே அவர் தேர்வுக் குழுவுக்குத் தெரிவித்திருக்க வேண்டும், என்று வெங்சர்க்கார் கூறியுள்ளார்.