மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் கோபித்துக் கொண்டு கொல்கத்தாவிலிருந்து பாதியில் கிளம்பிச் சென்ற இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் திலீப் வெங்சர்க்கார், தனது ராஜினாமா முடிவை மாற்றிக் கொண்டு விட்டார். இன்று நடைபெறும் தேர்வுக் குழுக் கூட்டத்திற்கு அவர் வருகிறார்.
இந்திய அணிக்கான தேர்வுக் குழு தலைவராக இருப்பவர் வெங்சர்க்கார். ஆனால் இந்திய அணி கலந்து கொள்ளும் போட்டிகள் குறித்து விமர்சித்து அவர் கட்டுரைகள் எழுதி வந்தார். இதற்கு வீரர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
வெங்சர்க்கார்தான் அணியைத் தேர்வு செய்கிறார். பிறகு அவரே வீரர்களை விமர்சித்து கட்டுரை எழுதுவது எந்த வித்தில் நியாயமாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.
இதையடுத்து வெங்சர்க்கார் கட்டுரைகள் எழுதக் கூடாது என்று கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. அதற்குப் பதிலாக இழப்பீடு தரவும் அது முடிவு செய்தது.
ஆனால் முதலில் இந்த தடை உத்தரவை பின்பற்றாமல் இருந்தார் வெங்சர்க்கார். ஆனால் வாரியம் கடுமையாக எச்சரித்ததைத் தொடர்ந்து கட்டுரை எழுதுவதை தற்போது நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின்போது பாதியிலேயே கொல்கத்தாவிலிருந்து கிளம்பிச் சென்றார் வெங்சர்க்கார். தேர்வுக் குழுத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்ய விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கிரிக்கெட் வாரியம், வெங்சர்க்கார் விரும்பினால் தாராளமாக ராஜினாமா செய்து கொள்ளலாம் என்று அதிரடியாக தெரிவித்தது.
இந்த நிலையில் நேற்று மும்பை வந்து சேர்ந்த வெங்சர்க்கார், இன்று பெங்களூரில் நடைபெறும் இந்திய அணித் தேர்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்தச் சூழ்நிலையில் நேற்று இரவு வாரியத் தலைவர் சரத்பவாருடன், வெங்சர்க்கார் நீண்ட நேரம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து தேர்வுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அவர் முடிவு செய்தார். ராஜினாமா முடிவையும் அவர் கை விட்டு விட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட்டின் நலனைக் கருத்தில் கொண்டும், கிரிக்கெட் வாரியத்தின் மென்மையான நிலையைக் கருத்தில் கொண்டும் தேர்வுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளேன் என்றார்.
இன்று பெங்களூரில் நடைபெறும் தேர்வுக் குழுக் கூட்டத்திற்கு வெங்சர்க்கார் தலைமை தாங்குகிறார். இன்றைய கூட்டத்தில் பாகிஸ்தான் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய பயணத்தில் இடம் பெறும் இந்திய அணியின் வீரர்களை தேர்வு செய்யவுள்ளனர்.