
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் கடந்த மாதம் அனூப் சிங் கலோனி என்ற போதைப் பொருள் கடத்தல்காரன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங்கும், அவரது நண்பரும் குத்துச்சண்டை வீரருமான ராம்சிங்கும் பல முறை அவரிடம் ஹெராயின் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது.
இதை ராம்சிங் ஒப்புக்கொண்டதுடன் 12 முறை விஜேந்தர்சிங் ஹெராயின் போதை மருந்தை பயன்படுத்தினார் என்றும் கூறினார். ஆனால் விஜேந்தர்சிங் தாம் போதைப் பொருளை பயன்படுத்தியதில்லை என்று தொடர்ந்தும் மறுத்து வந்தார்.
இந்நிலையில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் விவகாரத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகம் திடீரென தலையிட்டு அவரிடம் உடனடியாக ஊக்க மருந்து சோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது.