ஜோகன்னஸ்பர்க்: பயிற்சியின் போது வலது கையில் காயமடைந்த யுவாரஜ் சிங் சாம்பியன் டிராபி தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விராத் கோஹ்லி சேர்க்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க வந்துள்ள இந்திய அணி வரும் 26ம் தேதி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
தற்போது ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழக வளாகத்தில் பயிற்சி செய்து வருகிறது.
நேற்று பீல்டிங் பயிற்சி நடந்தது. அப்போது யுவராஜின் வலது கையில் பலமாக அடிபட்டுள்ளது. இதையடுத்து அணியின் பிசியோதெரபிஸ்ட் நிடின் படேல் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்துள்ளார்.
மேலும், அவருக்கு குறைந்தபட்சம் 6 வாரம் ஓய்வு தேவைப்படும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு பதிலாக விராத் கோஹ்லியை சேர்த்துள்ளது.
முன்னதாக இந்திய அணி ஷேவாக், ஜாகிர் கான் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் சாம்பியன்பின்ஸ் டிராபி தொடருக்கு கிளம்பியுள்ளது.
மற்றொரு நட்சத்திர வீரர் கம்பீர் குணமடைந்துவிட்டதாக கூறப்பட்டாலும் அவர் களமிறங்குவது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் யுவராஜூம் காயமடைந்திருப்பது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வெற்றி...
நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வராத நிலையில் கிறிஸ் கெய்ல், சந்தர்பால், சர்வன் என முன்னணி வீரர்களும் யாரும் பங்கேற்கவில்லை.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 9வது வீரராக வந்த மில்லர் மட்டும் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். அவர் எடுத்த ரன்கள் 51.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் 34.3 ஓவரில் 133 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
எளிய இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தானை வெஸ்ட் இண்டீஸ் பவுலர் டோங்கே ஒரு வழி செய்தார். இவரது வேகத்தில் முன்கள வீரர்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினர். ஆனாலும் ஒரு வழியாக சமாளித்த பாகிஸ்தான் 30.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து வென்றது.
அக்மல் 41, அப்ரிதி 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டோங்கே 10 ஓவர் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.