கொழும்பு: இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு வெளிநாட்டு தலைவர்களுக்கு கொடுக்கப்படும் விவிஐபி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களை சுற்றி சுமார் 100 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட், ஐந்து ஒரு நாள் மற்றும் ஒரு டுவென்டி-20 போட்டியில் விளையாட இலங்கை வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 4ம் தேதி காலே நகரில் நடக்கிறது.இந்நிலையில் கடந்த மார்ச் 3ம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்ற இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் 7 பேர் படுகாயமைடந்தனர்.இந்த துயர சம்பவத்துக்கு பின்னர் இரு அணிகளும் மீண்டும் மோதும் டெஸ்ட் தொடர் இது தான். இதனால் இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு நாட்டுக்கும் வரும் வெளிநாட்டு அதிபர், பிரதமர் போன்ற தலைவர்களுக்கு கொடுக்கப்படும் விவிஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு மீடியா பிரிவு தலைவர் சரித் சேனநாயகே கூறுகையில், வீரர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்களது பேருந்துகள் செல்லும் வழியில் பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விவிஐபி பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் மற்றும் வெளியிலும் அவர்களை சுற்றி 100க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு இருப்பார்கள் என்றார்.