
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக் போட்டி துவங்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் லண்டன் நகருக்கு வந்து குவிந்து வருகின்றனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் லண்டனில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள விளையாட்டு குழுவின் சார்பாக பலர் போலி விசா மூலம் லண்டன் வந்து இறங்கி இருப்பதாக சர்வதேச அளவில் பிரபல பத்திரிக்கையான 'த சன்' செய்தி வெளியி்ட்டுள்ளது.
இது குறித்து ரகசிய வீடியோ ஒன்றையும் 'த சன்' நிறுவனம் படம் பிடித்து வைத்துள்ளது. இதில் லாகூரை சேர்ந்த பிரபல அரசியல்வாதியான அபித்சவுத்ரி இடம் பெற்றுள்ளார். இந்த வீடியோவில் அபித்சவுத்ரி பேசுகிறார். அதில் விளையாட்டு வீரர்கள் போர்வையில் தீவிரவாதிகளை லண்டனுக்கு அனுப்புவது எளிதாக இருந்தது என்று அபித்சவுத்ரி கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது.
இது குறித்து 'த சன்' பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது,
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு வந்துள்ளவர்களில் சிலர், போலி விசா மற்றும் பாஸ்போர்ட் மூலம் லண்டனுக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரித்த போது, பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள விளையாட்டு குழு மற்றும் பார்வையாளர்கள் போர்வையில், சில தீவிரவாதிகள் லண்டனின் பலத்த பாதுகாப்பு வளையத்தை கடந்து உள்ளே நுழைந்துள்ளது தெரிகிறது.
இது தொடர்பான வீடியோவில், லாகூரை சேர்ந்த பிரபல அரசியல்வாதியான அபித்சவுத்ரி பேசுகிறார். அதில் அவர் கூறுகையில், 7 ஆயிரம் பவுண்ட் செலவில் எங்களின் ஆட்களுக்கு 2 மாத விசா எளிதாக கிடைத்துள்ளது. இதன் மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ள பாகிஸ்தான் விளையாட்டு குழுவில் எங்களின் ஆட்கள் நுழைந்துள்ளனர்.
வரும் 27ம் தேதி நடைபெற உள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்ள கூட எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். இதனால் எங்களிடம் யாரும் விசாரணை நடத்தமாட்டார்கள் என்று அபித்சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாங்கள் இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனமான எம்.ஐ.6க்கு தகவல் அளித்துள்ளோம். மேலும் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கும் தகவல் அளித்துள்ளோம் என்று அந்த பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அடுத்து இங்கிலாந்து அரசின் உள்துறை மற்றும் எம்.16 உளவுத்துறை, எல்லை பாதுகாப்பு படை போன்றவை உஷார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு 8 அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.