சாம்பியன் என்பதை நிரூபித்து விட்டோம்: டோணி
மும்பை:
தென்ஆப்பிரிக்காவில் நடந்த 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், எதேச்சையாக நாங்கள் சாம்பியன் ஆகவில்லை என்பதை ஆஸ்திரேலியாவை வென்றதன் மூலம் நிரூபித்து விட்டோம் என இந்திய கேப்டன் மகேந்திர சிங் டோணி கூறியுள்ளார்.
மும்பையில், இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நேற்று இரவு 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி முழுவதும் இந்தியாவின் ஆதிக்கம் அமர்க்களமாக இருந்தது.முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை எடுத்தது. ரிக்கி பாண்டிங் மட்டும் சிறப்பாக ஆடி 76 ரன்களைக் குவித்தார். அதிரடி மன்னன்களான கில்கிறைஸ்ட், மாத்யூ ஹைடன் ஆகியோரை இந்திய பந்துவீச்சாளர்கள் சீக்கிரமே சுருட்டி விட்டதால் ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் போனது.
பின்னர் களம் இறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆட ஆரம்பித்தது. கெளதம் கம்பீர், ராபின் உத்தப்பா ஆகியோர் அபாரமாக ஆடினர். இருவரும் இணைந்து 82 ரன்களைச் சேர்த்தனர். கம்பீர் 63 ரன்களைச் சேர்த்தார். உத்தப்பா 26 பந்துகளில் 35 ரன்களைக் குவித்தார்.
ஆட்டம் சீக்கிரமே இந்தியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. கடைசி ஓவர்களை கேப்டன் டோணியும், துணை கேப்டன் யுவராஜ்
சிங்கும் சந்தித்தனர். கடைசியாக எடுக்க வேண்டிய வெற்றிக்குத் தேவையான 6 ரன்களை ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் டோணி.இந்த வெற்றியின் மூலம் இந்தியா, தான் உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது. இந்தியாவில் நடந்த முதலாவது 20-20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் நேற்று இந்தியர்கள் அசத்தி விட்டனர். 20-20 பார்முலா இன்னும் ஆஸ்திரேலிய வீரர்களுக்குப் பிடிபடவில்லை என்பதை நேற்றைய அவர்களது தடுமாற்றமான ஆட்டம் வெளிப்படுத்தியது.
ஆட்ட நாயகனாக கெளதம் கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குக் கார் பரிசளிக்கப்பட்டது. சிறந்த பீல்டர் மற்றும் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் ஆகிய இரு பரிசுகளும் (ரூ. 2லட்சம்) யுவராஜ் சிங்குக்குக் கிடைத்தது.
சும்மா ஆகவில்லை சாம்பியன் - டோணி
இந்த வெற்றி குறித்து பின்னர் டோணி கூறுகையில், இந்த வெற்றியில் நிறைய அர்த்தம் உள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் நாங்கள் ஏதோ எதேச்சையாக சாம்பியன் ஆகி விட்டதாக பலர் நினைத்தனர். ஆனால் அதை தவறு என்று இப்போது நிரூபித்து விட்டோம்.
இந்த போட்டியை அனுபவித்து ஆட நினைத்தோம். அதன்படியே எல்லாம் நல்லபடியாக நடந்தது. சிறந்த பவுலிங், சிறந்த பீல்டிங், சிறந்த பேட்டிங் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளோம்.
கெளதம் கம்பீர் மிகச் சிறப்பாக ஆடினார். அவர் பேட்டிங் செய்த விதம் அருமையாக இருந்தது. காயம் காரணமாக ஒரு நாள் போட்டியில் அவர் இடம் பெற முடியாமல் போனது. பாகிஸ்தான் தொடரில் நிச்சயம் அவருக்கு இடம் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் டோணி.
Story first published: Wednesday, December 7, 2011, 17:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications