
ரிக்கி பான்டிங் ஓய்வு பெற்றதால், சச்சினுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஆனால் அவருக்கு பல வீரர்களும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து கெளதம் கம்பீர் கூறுகையில், இன்னும் நிறைய ரன்கள் எடுக்கக் கூடிய திறமையுடன்தான் சச்சி்ன் உள்ளார். ரிக்கி பான்டிங் ஓய்வு பெற்று விட்டதால் சச்சினும் ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஏற்க மாட்டேன்.
யாரும் யாரையும் ஓய்வு பெறுமாறு கட்டாயப்படுத்த முடியாது. ஒவ்வொரு வீரருக்கும் தான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது தெரியும். பான்டிங் ஓய்வால் சச்சினுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக நான் கருதவில்லை. அது பான்டிங் என்ற தனிப்பட்ட ஒருவருடைய முடிவு. இருவரும் இரு வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இரு வேறு திறமையான வீரர்கள். எனவே இருவரையும் ஒப்பிடும் கேள்விக்கே இடமில்லை.
சச்சின் அணியில் இருந்தாலே அணிக்கு அது பெரிய பலமாக அமையும். நிச்சயம் அவர் தனது சரிவிலிருந்து மீண்டு வருவார். ஒவ்வொருவருக்கும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். இந்த விளையாட்டை ரசித்து, அனுபவித்து ஆடி வருகிறார் சச்சின். இந்தியா கண்ட மிகச் சிறந்த வீரர்களில் அவர் முக்கியமானவர். களத்தில் மட்டுமல்ல, களத்திற்கு வெளியேயும் அவர் மிகச் சிறந்த மனிதர்.
உலக அளவில் மிக் சிறந்த வீரர்களில் ஒருவர் ரிக்கி பான்டிங். தனது பாணியில் திறம்பட விளையாடியவர் அவர். தனது சொந்த விருப்பத்தின் பேரில் அவர் ஓய்வு பெற்றுள்ளார். அவரது சாதனைகள் என்றும் அவரது பெயரைச் சொல்லி நிற்கும். ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த கேப்டனாக என்றென்றும் அவர் நினைவு கூறப்படுவார் என்று கூறியுள்ளார் கம்பீர்.