கராச்சி: இலங்கை பேட்டிங்குக்கு பதிலடியாக கராச்சி டெஸ்டில் விளையாடி வருகிறது பாகிஸ்தான். சூப்பராக பேட் செய்த பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் 300 ரன்களை தாண்டி அசத்தினார். பாகிஸ்தான் நான்காவது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து கராச்சி டெஸ்ட் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் கராச்சியில் நடக்கிறது.முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு கேப்டன் ஜெயவர்தனா 240, சமரவீரா 231 ரன்கள் எடுத்து நல்ல ஸ்கோரை பெற்று தந்தனர். இலங்கை முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 644 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் துவக்க வீரர்கள் குர்ரம் 27, சல்மான் பட் 23 விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து வந்த கேப்டன் யூனிஸ் கான் இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தார்.இவர் 184 ரன்கள் எடுத்தபோது டெஸ்டில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார். அசத்தலாக பேட் செய்த யூனிஸ் இரட்டை சதம் கடந்தார்.இலங்கை கேப்டன் ஜெயவர்தனாவை தொடர்ந்து பாகிஸ்தான் கேபடனான யூனிசும் சதம் கடந்தார். இதன்மூலம் 132 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு அணியின் கேப்டன்களும் இரட்டை சதம் அடிக்கும் அதிசயம் முதன் முறையாக அரங்கேறியுள்ளது.பொறுப்பான ஆட்டத்தை அப்படியே தொடர்ந்த யூனிஸ், பெர்ணான்டோ பந்தை பவுண்டரிக்கு விரட்டி 300 ரன்களை கடந்தார். இவர் 306 ரன்களுடனும், கம்ரன் அக்மல் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் மட்டுமே மீதமுள்ள நிலையில் ஆட்டம் டிராவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனை படைக்க யூனிசுக்கு இன்னும் 95 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் விரைவில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீசின் லாரா 400 ரன்கள் எடுத்ததே இன்று வரை சாதனையாக இருக்கிறது.