இந்தூர்: இந்தூரில் இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது ஒரு நாள் போட்டியில் யுவராஜ் சிங் அபாரமாக ஆடி சதம் போட்டார். இப்போட்டியிலும் இந்தியா அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. இப்போட்டியில் யுவராஜ் சிங் சதம் அடித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார். இந்த நிலையில், இந்தூரில் இன்று 2வது ஒரு நாள் போட்டி நடந்தது. முதலில்ஆடிய இந்தியா அபாரமாக ஆடி 292 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் கம்பீர் வழக்கம் போல சிறப்பாக ஆடி 70 ரன்களைக் குவித்தார். இருப்பினும் ஷேவாக், சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோர் ஆரம்பத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா சற்றே ஆட்டம் கண்டது. இருப்பினும் கம்பீரும்,யுவராஜ் சிங்கும் சேர்ந்து அணியை சரிவுப் பாதையிருந்து மீட்டு அதிரடிப் பாதைக்குத் திருப்பினர். 122 பந்துகளைச் சந்தித்த யுவராஜ் சிங் 118 ரன்களைக் குவித்தார். கம்பீர் 76 பந்துகளில் 70 ரன்களை விளாசினார். கடைசி வரிசையில் களமிறங்கிய யூசுப் பதான் 50 ரன்களைக் குவித்தார். கேப்டன் டோணியின் பங்கு 15 ரன்களாகும். முன்னணி வீரர்கள் சற்றே சொதப்பிதயால் பெரிய ஸ்கோரை எட்டியிருக்க வேண்டிய இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 292 ரன்களையே எடுக்க முடிந்தது. பின்னர் இங்கிலாந்து ஆடத் தொடங்கியது. ஆரம்பம் முதலே இங்கிலாந்து நிதானமாக ஆடத் தொடங்கியது. பேட்டிங்கில் ஜொலித்த யுவராஜ் சிங் பவுலிங்கிலும் புயலெனப் புகுந்து இங்கிலாந்தை நிலை குலைய வைத்தார். நன்றாக ஆட ஆரம்பித்த பிரியரை 38 ரன்களில் போல்ட் ஆக்கினார் யுவராஜ் சிங். அதேபோல ஓவாஸ் ஷா (58), பீட்டர்சன் (33), பிளின்டாப் (43) ஆகியோரும் யுவராஜ் பந்தில் வீ ழ்ந்தனர். காலிங்வுட் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்பஜன் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய படேல் 20 ரன்களில் ஷேவாக் பந்தில் ஆட்டமிழந்தார். போபாராவை யூசுப் பதான் அவுட் ஆக்க, பிராடை ஷேவாக் பெவிலியனுக்கு அனுப்பினார். அதேபோல ஹர்மிசனும் ஷேவாக் பந்தில் டோணியால் ஸ்டம்ப்ட் செய்யப்பட்டார். இறுதியில், 47 ஓவர்களில் 238 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது. யுவராஜ் சிங் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களையும், ஷேவாக் 3 விக்கெட்களையும் சாய்த்தனர். ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார். கடந்த போட்டியிலும் இவரே ஆட்ட நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. 7 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.