லண்டன்: இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் ரன் மழை கான்பூர் போட்டியோடு நிறுத்தப்பட்டு விடும் என இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார். இந்திய - இங்கிலாந்து ஒரு நாள் போட்டித் தொடரில் இதுவரை நடந்துள்ள 2 போட்டிகளிலும் யுவராஜ் சிங்கின் கொடியே உயரப் பறந்து வருகிறது. இரு போட்டிகளிலும் சதம் போட்ட யுவராஜ், 2வது போட்டியில், நான்கு விக்கெட்களையும் வீழ்த்தி இங்கிலாந்தை நிலை குலையச் செய்தார். இந்த நிலையில் நாளை கான்பூரில் மூன்றாவது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது. கடந்த இரு போட்டிகளிலும் யுவராஜ் சிங் பேட்டிங்கில் சாதித்திருக்கலாம். ஆனால் கான்பூர் போட்டியில், அவரது ரன் மழை கட்டுப்படுத்தப்படும், அதை நிறுத்தும் வழியைக் கண்டுபிடித்துள்ளோம் என்று இங்கிலாந்து பந்து வீச்சாளர் பிராட் கூறியுள்ளார். இதுகுறித்து பிராட் கூறுகையில், உண்மையில், யுவராஜ் சிங் நல்ல பார்மில் உள்ளார். இந்திய சூழ்நிலையில் அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் இது நீடிக்காது. அவருக்குப் பந்துகளை ஒரே மாதிரியாகப் போடாமல் விதம் விதமாக போடுவது என தீர்மானித்துள்ளோம். அப்போது அவர் ஏமாற்றப்படுவார். ஆனால் அவர் நல்ல பார்மில் உள்ளதால், இது சாத்தியமா என்று தெரியவில்லை. இருப்பினும் கடந்த இரு போட்டிகளில் விளையாடியதைப் போல கான்பூரிலும் அவர் விளையாட முடியாது என்றே உறுதியாக நம்புகிறோம். நிச்சயம் அவரது ரன் வேகம் கட்டுப்படுத்தப்படும் என்றார் பிராட். கங்குலி இடம் யுவராஜுக்கு- ஸ்ரீகாந்த்: இதற்கிடையே, டெஸ்ட் போட்டியில் கங்குலி இதுவரை விளையாடி வந்த இடம் யுவராஜ் சிங்குக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர் குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெஸ்ட் போட்டிகளில் கங்குலி இதுவரை வகித்த இடத்திற்கு நிறையப் போட்டிகள் உள்ளன. பல வீர்ரகள் அந்த இடத்தில் அமர போட்டியில் உள்ளனர். ஆனால் யுவராஜ் சிங் முன்னணியில் இருக்கிறார். கங்குலி இடத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் அவர் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் ஸ்ரீகாந்த்.